இன்னும் நாம் குறி வைக்கப்படுகிறோம்: திருமாவுக்கு ஆதங்கம்
இன்னும் நாம் குறி வைக்கப்படுகிறோம்: திருமாவுக்கு ஆதங்கம்
ADDED : ஜூன் 26, 2026 06:52 PM

சென்னை: தவெக அரசில் இடம்பெற்றிருந்த நிலையிலும் மிகக்கடுமையாக இழிவாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் நாம் குறிவைக்கப்படுகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். பல மடங்கு வீரியத்துடன் களமாட தேவையிருக்கிறது. இதனால் தான் திமுக கூட்டணியில் இருந்த போது கொச்சைப்படுத்தியவர்கள், இன்றைக்கு தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த நிலையிலும் மிகக்கடுமையாக இழிவாக, விமர்சித்து வருகிறார்கள்.நாம் இன்னும் குறிவைக்கப்படுகிறோம் என்பது தான் இதன் பொருள். நம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் காய்களை நகர்த்த வேண்டும். நம்முடைய களம் வேறு எவராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத களம். வேறு எவராலும் நம்மை அப்புறப்படுத்திவிட முடியாத களம். வேறு யாரும் நம்மோடு போட்டி போட முடியாத களம் என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.
இன்று தலைகீழாக மாறியிருக்கும் அரசியல் சூழலில், நாம் மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவே களமாடி வருகிறோம். தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக செயலாற்றி வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
