நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம்: கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் அதிரடி
நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம்: கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் அதிரடி
ADDED : நவ 01, 2025 07:41 AM

மதுரை: கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. யார் உண்மையை மாற்றி கூறினாலும் சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
கரூர், வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கோவில் செயல் அலுவலர் சுகுணா ஆஜராகினர். வருவாய்த்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'காலியாக இருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது.
வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் உள்ள நிலம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நபர் பெயர்களில் வழங்கிய பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றார்.
நீதிபதிகள், 'ஆவணங்கள் அடிப்படையில் மனுதாரர் கள ஆய்வு செய்யலாம். அதிகாரிகள் உள்ளிட்ட வேறு யாரும் ஆக்கிரமித்துள்ளனரா, பினாமி பெயரில் அச்சொ த்து உள்ளதா என ஆய்வு செய்யலாம்.
'ஒட்டுமொத்த அரசுத்துறையும் ஒத்துழைக்க வேண்டும். அச்சுறுத்தல் வந்தால் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கலாம். 'நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. அதற்காக அரசுக்கு இறுதி வாய்ப்பு வழங்குகிறோம்.
'யார் உண்மையை மாற்றி கூறினாலும், நிலத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறினாலும், சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம்.
யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. முயற்சித்தால் நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்' என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வருவாய்த்துறை ஆவணங்கள், அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அரசின் நடவடிக்கையில் முன்னேற்றம் உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள ரிட் மற்றும் ரிட் மேல் முறையீட்டு மனுக்களை இவ்வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். வரும் காலங்களில் இவ்வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை நவ., 7க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

