மீண்டும் வருமா அம்மா குடிநீர்: பயணிகள் எதிர்பார்ப்பு
மீண்டும் வருமா அம்மா குடிநீர்: பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 10, 2026 02:06 AM

மதுரை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 'பயணி' குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கியுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க., ஆட்சியில் பயணிகளின் வரவேற்பை பெற்றிருந்த 'அம்மா குடிநீர்' திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 'பயணி' குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் விரைவு போக்குவரத்து பஸ்களில் பயணிப்போருக்கு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10 க்கு விற்கப்படுகிறது.
2013ல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 'அம்மா குடிநீர்' திட்டத்தை துவக்கினார். இதற்காக கும்மிடிப்பூண்டியில் 2.47 ஏக்கரில், ரூ.10.5 கோடியில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் அனைத்து பஸ்ஸ்டாண்டுகளிலும் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.10க்கு விற்பனையானது. குறைந்த விலை காரணமாக இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. தினசரி 2 லட்சம் லிட்டர் குடிநீர் விற்கப்பட்டது. பின்னர் தனியார் வசம் இந்த சேவை ஒப்படைக்கப்பட்டு கடந்தாண்டுகளில் 80,000 லிட்டர், 12,000 லிட்டர் என படிப்படியாக உற்பத்தி குறைக்கப்பட்டது.
கொரோனாவுக்குப் பின் உற்பத்தி முடங்கியது.
இந்நிலையில் த.வெ.க., அரசு அறிமுகப்படுத்திய 'பயணி' குடிநீர் திட்டம், விரைவு போக்குவரத்து பஸ்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பயன் தரும் வகையில் உள்ளது.
எனவே குடிநீர் உற்பத்தி மற்றும் விற்பனை கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்ட அம்மா குடிநீர் திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும். பிற அரசு பஸ்களில் பயணிப்பவர்களுக்கும் ரூ.10க்கு குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
