UPDATED : ஆக 30, 2026 11:09 PM
ADDED : ஆக 30, 2026 09:49 PM

துபாய்: தாய்லாந்துக்கு எதிரான ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 94 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - தாய்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடினர். மந்தனா 19 ரன்னில் ரன் அவுட்டானார். அதன் பிறகு வந்த பிரதிகா ராவல் 22 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷபாலி அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 12.4 ஓவரில் 112ஆக எட்டிய போது, 36 பந்தில் 64 ரன் அடித்த ஷாபாலி விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு வந்த இந்திய வீராங்கனைகளின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டை போல சரிந்தன. இதனால், 137 ரன்னுக்கே 9 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இறுதியில் கிராந்தி கவுட் 8 பந்தில் 15 விளாசியதால், இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் குவித்தது.
தாய்லாந்து அணி தரப்பில் சுலீபோர்ன் 3 விக்கெட்டும், சுனிதா 2 விக்கெட்டும், சனிதா, திபட்சா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
160 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் நன்னாபட் கோன்சரோங்கை மட்டும் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் விரைவில் அவுட் ஆகி வெளியேறினர். தாய்லாந்து அணி 16.1 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 65 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்த நிலையில் இந்திய அணி, 94 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் நந்தினி சர்மா, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்ரீ சாரனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
