நேற்றைய போராட்டம்: சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை அதிகாரிகள் கைவிரிப்பு
நேற்றைய போராட்டம்: சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை அதிகாரிகள் கைவிரிப்பு
ADDED : பிப் 28, 2026 05:59 AM

சென்னை: சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காமல் இருப்பது, வேதனை அளிப்பதாக சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மாநில பொதுச்செயலர் காணிராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் சென்னையில் போராட்டம் நடந்தது. அப்போது, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அச்சங்கத்தினர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநர் ஆனந்தியை சந்தித்து பேசினர். இதுகுறித்து, சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் காணிராஜா கூறியதாவது:
இணை இயக்குநர் ஆனந்தியை நேற்று முன்தினம் சந்தித்து, எங்களின் கோரிக்கை குறித்து கேட்டோம். அரசு தரப்பில் இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார். எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காமல் இருப்பது, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் அலுவலர்கள்
பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த 26ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மூன்றாம் நாளான நேற்றும், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள், 100க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உதவியாளர்கள்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில், 23ம் நாளாக நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர். சென்னை எழிலகம் வளாகத்தில், 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர்கள்
பதவி உயர்வுக்கான பணி மேம்பாட்டு தொகையை விடுவிக்க கோரி, அரசு உதவிபெறும் கல்லுாரி பேராசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று நடந்த போராட்டத்தில், ஏராளமான பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மக்கள்நல பணியாளர்கள்
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர் சங்கத்தினர் போராடி வருகின்றனர். சென்னையில், 18 முதல் 20ம் தேதி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் புதியவன் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எங்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேர்தல் தேதி அறிவிக்கும் முன், அந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

