அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகள் யாருக்கு? பா.ம.க., - நா.த.க., பலப்பரீட்சை
அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகள் யாருக்கு? பா.ம.க., - நா.த.க., பலப்பரீட்சை
ADDED : ஜூலை 02, 2024 06:03 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கின்றது. இந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் சிவா, பா.ம.க.,சார்பில் அன்புமணி, நா.த.க., சார்பில் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளராக போட்டியில் உள்ளனர்.
பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.,தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்துவிட்டது. இதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வும் போட்டியில்லை என அறிவித்துவிட்டது. இதேபோல் நடிகர் விஜய் கட்சியான த.வெ.க., இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டது.
இடைத்தேர்தல் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.,தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்திருந்தாலும், அக்கட்சியின் ஆதரவு ஓட்டுகளை பெற போட்டா போட்டி நிலவுகிறது.
இதற்காகத்தான், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வேட்பாளர் அன்புமணியை தி.மு.க.,வை எதிர்த்து நிற்கும் பொது வேட்பாளராக கருதி அனைவரும் (அ.தி.மு.க., உட்பட) ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பா.ம.க., தலைவர் அன்புமணியும், அ.தி.மு.க.,வின் எதிரி தி.மு.க., என்பதால், இடைத்தேர்தலில் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதன் மூலம் அன்புமணி, அ.தி.மு.க.,வின் ஆதரவை பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்திற்கு சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி எம்.எல்.ஏ.,க்களுடன் சமீபத்தில் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்கு நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஆதரவை பெற சீமான் முயற்சித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பா.ம.க.,வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, அ.தி.மு.க., கிளை செயலாளர் ஒருவர் நேரடியாக தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
அ.தி.மு.க.,தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்திருந்த நிலையில் பா.ம.க.,வேட்பாளருக்கு அ.தி.மு.க.,வினர் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது அ.தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்து, விரைவில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதன் பிறகு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.