ADDED : ஆக 25, 2024 05:25 AM

''ஏழு கண்டங்கள்ல இருக்கிற ஏழு மலைகள் மேல ஏறி சாதனை படைக்கணும். இது தான் என் லட்சியம்...'' என சர்வ சாதாரணமாக சொல்கிறார், திருப்பூரைச் சேர்ந்த, 22 வயது இளைஞர் கனிஷ் விஜயகுமார்.''இதெல்லாம் நடக்கிற காரியமா?'
இப்படித்தான் மனம் சிந்திக்கும். இதற்கு முன்னோட்டமாக, கடந்த,ஆக., 15 சுதந்திர தினத்தன்று, ஹிமாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 6,111 மீ., உயரம் கொண்ட யூனம் மலை சிகரத்தின் உச்சியை தொட்டு வந்திருக்கிறார்.
''மலையேற்றம், மனம் கவர்ந்தது எப்படி?'' என்று கேட்டதும், உற்சாகமாய் பேசினார் கனிஷ்.கொரோனா சமயத்துல, நல்லா இருந்த நிறைய பேரு 'டக், டக்'ன்னு இறந்து போனாங்க. அது என்னை ரொம்ப பாதிச்சுது.
நம்ம உடம்பையும், மனசையும் நல்லா வச்சுக்கணும்; ஏதாவது ஒரு வீர விளையாட்டுல ஈடுபடணும்ங்கற ஆசை வந்துச்சு.கொரோனா முடிஞ்சத்துக்கு அப்புறம், திருப்பூர்ல இருந்து புதுச்சேரி போய், அங்க இருந்து சென்னை வந்து, திரும்பவும் திருப்பூருக்கு கிட்டத்தட்ட, 1,500 கி.மீ., சைக்கிள் பயணம் போனேன். அதன் விளைவு, யூனம் மலைச்சிகரம் ஏற ஊக்குவிப்பா இருந்துச்சு. அதுக்கு முன்னாடி, எவரெஸ்ட் 'பேஸ் கேம்ப்'ல கலந்துக்கிட்டு, 5,484 மீ., உயரம் ஏறியிருக்கேன்.
உலகின் உயரமான, கடல்மட்டத்தில இருந்து, 8848 மீ., உயரத்துல இருக்கிற எவரெஸ்ட் மலை சிகரத்தை தொடணும்ங்கறது என்னோட ஆசை. அப்படி ஏறினா, இளம் வயதில், எவரெஸ்ட் சிகரம் ஏறின பெருமையும் கிடைக்கும்; ஆனா, அது ரொம்ப சவாலானது. அதற்கான முயற்சியை எடுத்துட்டு இருக்கேன்.
ஏழு கண்டங்கள்ல இருக்கிற ஏழு மலைகள்ல ஏறுவது தான் என்னோட வாழ்நாள் சாதனை. முதல்கட்டமாக, வரும் டிசம்பர் மாதம், ஆப்ரிக்கா கண்டத்துல இருக்க, கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏற இருக்கேன்; இதோட உயரம் கடல் மட்டத்தில் இருந்து, 5,895 மீட்டர்'' என்றார் உள்ளத்தில் ஆர்வம் பொங்க.
''ஆனா, இதுக்கெல்லாம் நிறைய செலவாகும்; இப்போது தான் நம் நாட்டில் மலையேற்றம் பிரபலமாகிட்டு வருது; ஸ்பான்ஸர் வாங்கறதும் சிரமமா இருக்கு. 'ஸ்பான்ஸர்' கிடைச்சா சாதனைக்கு தடை இருக்காது'' என்றார் கனிஷ் விஜயகுமார் சற்றே ஆதங்கத்துடன்.