ADDED : ஏப் 07, 2024 02:18 AM

புதுடில்லி: தமிழரான எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலராக இருந்து மத்திய அமைச்சரானவர். ஆரம்பத்தில் அரசியல் தொடர்பாக அதிகம் பேசாமல் இருந்தார். இப்போது அவர் முழு அரசியல்வாதியாகி விட்டார்.
தி.மு.க., தொடர்ந்து கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிக் கொண்டிருக்க, 'இது தொடர்பாக என்ன நடந்தது; காங்கிரசும், தி.மு.க.,வும் கைகோர்த்து எப்படி கச்சத்தீவை தாரை வார்த்தன என்பதை, தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, ஜெய்சங்கர் தான், பிரதமர் மோடிக்கு ஆலோசனை கூறியதாக டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதை ஏற்று, கச்சத்தீவு விவகாரத்தை முக்கிய தேர்தல் பிரசாரமாக்கிஉள்ளார் மோடி. இதனால், தி.மு.க., இதைப் பற்றி அதிகம் பேச முடியாமல் அமைதியாக உள்ளது.
'கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முடிந்து போன விஷயம்; அதை மீண்டும் கிளறத் தேவையில்லை' என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், கச்சத்தீவு குறித்து இலங்கை, 'டிவி' ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மறைமுகமாக பேச்சு நடக்கிறதாம். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையை வாங்கித் தர மோடி முயற்சித்து வருகிறாராம்; இதிலும் ஜெய்சங்கர் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

