ADDED : ஏப் 07, 2024 12:45 AM

புதுடில்லி: இந்த முறை எப்படியாவது தென் மாநிலத்திலிருந்து அதிக எம்.பி.,க்களைப் பெற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் குறிக்கோள். இதனால் அடிக்கடி தமிழகம், கேரளா உட்பட தென் மாநிலங்களுக்கு பிரசாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்கியுள்ளார்.
கடந்த முறை தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஒருவர் கூட எம்.பி.,யாகவில்லை; இந்த முறை அந்த நிலை மாறும் என பா.ஜ., நம்பிக்கையில் உள்ளது.
'தமிழகத்தில் தி.மு.க., எதிர்ப்பு அலை வீசுகிறது' என கூறும், பா.ஜ., கூட்டணி தலைவர் ஒருவர், 'தமிழகத்தில், பா.ஜ., 10 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என்கிறார்.
கேரளாவிலும் இந்த முறை பா.ஜ., - எம்.பி., வெற்றி பெறுவார் என, எதிர்பார்ப்பில் உள்ளனர் பா.ஜ.,வினர். கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரசின் தற்போதைய எம்.பி., சசி தரூர் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் களம் இறங்கியுள்ளார். மற்ற கேரளாவின் தொகுதிகளைப் போல இல்லாமல், இந்த தொகுதியில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
குருவாயூருக்கு அருகில் உள்ள திருச்சூரிலிருந்து மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். இவருடைய மகள் திருமணத்தை கோவிலில் நடத்தி வைத்தார் மோடி. இந்த இரண்டு தொகுதிகளில் நிச்சயம் பா.ஜ., வெற்றி பெறும் என, மோடி நம்புகிறாராம்.

