ADDED : மே 21, 2024 09:50 PM

தேர்வு எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் போன்ற மனநிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளனர். லோக்சபா தேர்தல் என்ற தேர்வை எழுதிய இவர்கள், படபடக்கும் மனதுடன் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வெற்றி கிடைக்க வேண்டும் என கோவில்களுக்கு படை எடுக்கின்றனர்.
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், இரண்டு மாதங்களாக ஓய்வின்றி பிரசாரம் செய்தனர். வாக்காளர்களை கவர அலை பாய்ந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்து தற்போது முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிந்தனைகள்
வெற்றி பெறுவோமா; எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும், வாக்காளர்கள் கை விட்டு விடுவாரா என, பல விதமான சிந்தனைகள் வாட்டுகின்றன.
பல தலைவர்களின் எதிர்காலத்தை, லோக்சபா தேர்தல் முடிவே தீர்மானிக்கும். 2023 சட்டசபை தேர்தலில் தோற்ற சில தலைவர்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். இதிலும் தோற்றால், இவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
இதுபோன்று அச்சத்தில் உள்ள வேட்பாளர்கள், வெற்றி கிடைக்க வேண்டும் என, கோவில் கோவிலாக சுற்றுகின்றனர்.
தேர்தல் காய்ச்சலில் அவதிப்படும் வேட்பாளர்களில் ஸ்ரீராமுலு, ஈஸ்வரப்பாவும் உள்ளனர். பா.ஜ., வேட்பாளராக ஸ்ரீராமுலுவும், சுயேச்சை வேட்பாளராக ஈஸ்வரப்பாவும் போட்டியிட்டனர்.
தன் மகன் காந்தேஷுக்கு சீட் தரவில்லை என்ற எரிச்சலில், பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை எதிர்த்து, ஷிவமொகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஈஸ்வரப்பா களமிறங்கினார். ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பக்தி பாடல்கள்
தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என, ஈஸ்வரப்பா கடவுளிடம் முறையிடுகிறார். இரண்டு நாட்களுக்கு முன், பல்லாரி நகரின், கோட்டை மல்லேஸ்வரா கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார். பக்தி பாடல் பாடி கடவுளை பிரார்த்தனை செய்தார்.
அதேபோன்று, ஸ்ரீராமுலுவும் ஆந்திரா ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். சிவனுக்கு பல்லக்கு சேவை நடத்தினார். சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
ஈஸ்வரப்பா, ஸ்ரீராமுலு மட்டுமின்றி, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, பலரும் வெளி மாநிலங்களின் கோவில்களை தரிசித்து, வெற்றிக்காக பிரார்த்தனை செய்கின்றனர். அதே நேரம், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள், வீட்டில் ஓய்வாக குடும்பத்துடன் பொழுது போக்குகின்றனர்.
- நமது நிருபர் -

