ADDED : ஆக 27, 2024 12:57 AM

புதுடில்லி: மிரட்டி பணம் பறித்தல், சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு, 'டெலிகிராம்' செயலி பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, அந்த செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'வாட்ஸாப்' செயலியை போல, 'டெலிகிராம்' செயலியும் தகவல் பரிமாற்றத்துக்கு உலக முழுதும் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸாப் போல பல கட்டுப்பாடுகளை இந்த செயலி பின்பற்றாததால், உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
பணப்பரிமாற்ற மோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக பிரான்ஸ் அரசு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான அசர்பைஜானில் இருந்து பிரான்சின் பாரிஸ் விமான நிலையம் வந்திறங்கிய டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, கடந்த 24ல் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவரான துரோவ், பாரிஸ் மற்றும் ரஷ்யாவில் இரட்டை குடியுரிமை பெற்றவர்.
இவரது கைதுக்கு எக்ஸ் சமூகவலைதள அதிபர் எலான் மஸ்க், ஸ்வீடனைச் சேர்ந்த, 'விசில் ப்ளோயர்' எட்வர்ட் ஸ்நோடென் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து டெலிகிராம் செயலியின் நடவடிக்கையை மத்திய அரசு தோண்ட துவங்கியுள்ளது.
இந்த நேரத்தில், இந்தியாவில் சூதாட்டம், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இதையடுத்து, நம் நாட்டில் செயல்படும் சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளை டெலிகிராம் செயலி பின்பற்றுகிறதா என்பதை கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
நம் தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி அதிகாரி மற்றும் தலைமை இணக்க அதிகாரியை அந்நிறுவனம் நியமிக்க வேண்டும்.
இணக்க அறிக்கையை மாதா மாதம் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை டெலிகிராம் நிறுவனம் செய்கிறதா என்பதை அரசு விசாரிக்க துவங்கியுள்ளது.
மேலும், டெலிகிராம் செயலி மீது குவிந்துள்ள புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு தோண்ட துவங்கியுள்ளது.
இந்த விசாரணையின் முடிவுகள் நிறுவனத்துக்கு பாதகமாக இருந்தால், நம் நாட்டில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.