காங்., - எம்.பி., ராகுலின் பிடிவாதம்; இடியாப்ப சிக்கலில் கட்சி தலைமை
காங்., - எம்.பி., ராகுலின் பிடிவாதம்; இடியாப்ப சிக்கலில் கட்சி தலைமை
UPDATED : மே 01, 2024 04:28 AM
ADDED : மே 01, 2024 02:06 AM

வரும் 3ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், ராகுலின் பிடிவாதம் காரணமாக, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்குவது குறித்து முடிவெடுக்க முடியாமல் காங்., தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
காங்கிரசின் பாரம்பரியமிக்க தொகுதிகளாக, உ.பி.,யில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகியவை உள்ளன.
ராஜினாமா
பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கிய நிலையில், 2019ல், அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக, பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானி களம் இறங்கி, 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார்.
கட்சியின் தலைவரான ராகுலே தோற்றுப்போனதில், காங்கிரஸ் பெரும் அதிர்ச்சியடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜினாமா செய்தார்.
கட்சிக்குள் போதுமான ஒத்துழைப்பு இல்லை, மூத்த தலைவர்கள் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்ற குமுறல் ராகுலுக்குள் இருந்தது. கடந்த தேர்தலில் கடைசி நேரத்தில் கேரள மாநிலம் வயநாட்டிலும் அவர் போட்டியிட்டதால், எம்.பி., பதவியை தக்க வைக்க முடிந்தது.
தற்போதைய தேர்தலில் அவர் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதியிலும் போட்டியிடுவார் என காங்., தலைவர்கள் எதிர்பார்த்தனர். இதுவரையில், ராகுல் பிடிகொடுக்கவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பது மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லை.
அமேதி, ரேபரேலி இரண்டுமே காங்., தலைமையின் குடும்ப தொகுதி கள் என்பதால், அது குறித்து அந்த குடும்பம்தான் முடிவெடுக்க வேண்டு மென்று, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இரு தொகுதிகளிலும் மே 20ல் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. வேட்புமனுத்தாக்கல் வரும் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அமேதியில் மீண்டும் ராகுல் களம் இறங்கி, ஸ்மிருதி இரானி மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் ராகுலுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்படும். பிரதமர் வேட்பாளர் என்ற நிலையில் உள்ள ராகுல், ஒரு அமைச்சரிடம் இரண்டாவது முறையாக தோற்கிறார் என்றால், அது பெரும் அவமானம்.
மேலும், அமேதியில் ராகுல் போட்டியிடாவிட்டால், 'உ.பி.,யை கைகழுவியது சோனியாவின் குடும்பம்' என்றும், 'போட்டியிட பயந்து ஓடிவிட்டனர்' என்றும், பா.ஜ., விமர்சனம் செய்யும்.
குடும்ப அரசியல்
--- நமது டில்லி நிருபர் -
அடுத்ததாக, அமேதியில் பிரியங்காவை நிறுத்தி, அவர் வெற்றி பெற்று விட்டால், 'ராகுலால் முடியாததை, பிரியங்கா செய்து முடித்து விட்டார்' என்ற பேச்சும் எழும். அப்படி நிகழ்ந்தால், கட்சிக்குள் ராகுலைவிட பிரியங்காவின் கை ஓங்கும். இது, கட்சிக்குள் தேவையற்ற பிளவை ஏற்படுத்தும்.
பிரியங்காவின் கணவருக்கு வாய்ப்பு தரலாம் என்றால், குடும்ப அரசியல் விமர்சனம் மேலும் வலுப்பெற்று, நாட்டின் பிற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை குறைக்கும்.
இத்தனை பெரிய குழப்பங்கள் சூழ்ந்து இருப்பதால்தான், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியாமல், இடியாப்பச் சிக்கலில் காங்., மேலிடம் சிக்கி தவிக்கிறது.