ADDED : மார் 24, 2024 03:35 AM

புதுடில்லி: சமீபத்தில், 'தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டனர்; பிரசாரம் செய்ய பணம் கிடையாது. ஜனநாயகத்தை பா.ஜ., ஒடுக்கப் பார்க்கிறது' என சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே கூட்டாக பேட்டியளித்தனர்.
ஆனால், இந்த சிக்கலுக்கு காரணம், காங்கிரஸ் தான் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். கடந்த 2018 - -19ம் ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்யவில்லை காங்கிரஸ். இதனால், 135 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. இதை எதிர்த்து, வருமான வரி தீர்ப்பாயம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றம் சென்றது காங்கிரஸ். ஆனால், இரண்டுமே காங்., மனுவை தள்ளுபடி செய்தன. உயர் நீதிமன்றம் ஒரு படி மேலே போய், 'கடந்த 2021லிருந்து காங்கிரஸ் துாங்கிக் கொண்டிருந்ததா?' என, கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது காங்கிரஸ். வழக்கு விசாரணை ஏப்ரல் 1ம் தேதி நடக்கவுள்ளது. 'அபிஷேக் மனு சிங்வி உட்பட, பல சீனியர் வக்கீல்கள் காங்கிரசில் இருந்தும், எப்படி இந்த விஷயத்தை தவற விட்டனர்' என, கட்சி சீனியர்கள் வருத்தப்படுகின்றனர். 'சரியான சமயத்தில் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும்' என, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
'ஒரு பக்கம் அமலாக்கத் துறை, இன்னொரு பக்கம் வருமான வரித்துறை என, அரசு இயந்திரங்களை எங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் மோடி; இதன் விளைவு, தேர்தல் முடிவில் தெரிய வரும்' என்கிறது காங்கிரஸ்.

