ரூ.1001 திரட்ட முடியாமல் போராட்டம் நடத்தாத காங்கிரஸ்
ரூ.1001 திரட்ட முடியாமல் போராட்டம் நடத்தாத காங்கிரஸ்
ADDED : ஆக 29, 2024 05:20 AM

சென்னை: ரயில்வே துறைக்கு, 1,001 ரூபாய் அனுப்பும் போராட்டத்தை அறிவித்த தமிழக காங்கிரஸ், குறித்த நாளில் போராட்டத்தை நடத்தவில்லை. நிதி திரட்ட திண்டாடியதுதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு, 1000 ரூபாய் ஒதுக்கியதை கண்டிக்கும் வகையில், ரயில்வே துறைக்கு, 1001 ரூபாயை அனுப்பும் போராட்டம், கடந்த 23ம்தேதி நடத்தப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
ஆனால், எந்த ஒரு மாவட்ட தலைவரும், 1001 ரூபாய் அனுப்பி வைக்க முன்வரவில்லை என்பதால், அறிவித்த நாளில் போராட்டம் நடக்கவில்லை. இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், கேள்வி எழுப்பி, தமிழக காங்கிரசை கண்டித்தார். '1001 ரூபாய் திரட்ட காங்கிரசார் திண்டாடுவதால், போராட்டம் நடக்கவில்லை' என, பலரும் கிண்டல் அடித்தனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில் 1001 ரூபாய் நிதி ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்கும் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.