தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தில்லையில் தொடரும் தொல்லை

தில்லையில் தொடரும் தொல்லை

தில்லையில் தொடரும் தொல்லை


UPDATED : மார் 31, 2024 01:34 PM

ADDED : மார் 31, 2024 02:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2024 01:34 PM ADDED : மார் 31, 2024 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக அறநிலைய துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஐந்து விதமான நிர்வாக சீர்கேடுகளை பார்க்கலாம்.

* வழிபாட்டு முறைகளில் குறுக்கீடுகள்

* கோவில் சொத்துக்களை பாதுகாப்பதிலும், அவற்றில் இருந்து முறையான வருமானத்தை பெறுவதிலும் பெரும் சுணக்கம். 6,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரவேண்டிய இடத்தில், 200 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாமல் இருப்பது

* கோவில்களின் நிர்வாகத்தில் திறமையின்மை, பெரும் ஊழல், அறநிலையத்துறை சட்டத்தை மீறி கோவில் சொத்துக்களையும், பணத்தையும் கோவில் நோக்கங்களுக்கு மாறாக கண்டமேனிக்கு மடைமாற்றுவது

* கோவிலின் தொன்மையை பாதுகாக்க தவறுவது. புராதன கோவில்களில், அதன் பழமையையும் பெருமையையும் சிதைக்கும் வண்ணம், புதிய தேவையற்ற கட்டுமானங்களை மேற்கொள்வது

* கோவில் கணக்குகளை மிக மோசமான முறையில் பராமரிப்பது; உள்தணிக்கை மட்டுமே செய்வது; அந்த உள் தணிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளை, 30, 40 ஆண்டுகளாக தீர்வை செய்யாமல் இருப்பது.

தமிழகத்தில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த ஐந்து விதமான சீர்கேடுகளும் மாறாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது முதலாவதாக சொல்லப்பட்ட, கோவில் வழிபாட்டு முறைகளில் குறுக்கீடு என்பது, மிக அதிக அளவில் இருக்கும். ஆகம வழிபாட்டை எப்படியெல்லாம் சிதைக்கலாம் என்று, எல்லா காலத்திலும் யோசித்து அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படுவது, இந்த ஆட்சியில் தான்.

கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ள பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து விட்டு, அதன்பின் செய்ய வேண்டிய முக்கிய வழிபாட்டு சடங்கான மண்டலாபிஷேகத்தை, 48 நாட்களுக்கு பதிலாக, மூன்று நாட்களில் முடிக்கப் பார்த்தவர்கள் தானே இவர்கள்! நீதிமன்றம் தலையிட்டு கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னர் தான், வேறு வழியில்லாமல் மண்டலாபிஷேகத்தில் குறுக்கிடுவதை நிறுத்தினர்.

வாயே திறக்கவில்லை


தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தில்லைவாழ் அந்தணர்களாகிய சிதம்பரம் தீட்சிதர்களுக்கு பெரும் பிரச்னைகள் எழும். இந்த முறை தி.மு.க., ஆட்சியில், அறநிலையத்துறை ஓர் அசாதாரண செயலைச் செய்தது. பத்திரிகையில் விளம்பரம் செய்து, சிதம்பரம் கோவில் நிர்வாகம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறியது.இதேபோன்று திருவண்ணாமலை, பழனி, திருச்செந்துார், ஸ்ரீரங்கம் கோவில்கள் குறித்து ஏன் அறநிலையத்துறை விளம்பரம் செய்யவில்லை.

அப்படிச் செய்திருந்தால், இவர்கள் யோக்கியர்கள், கோவில் நலன் தான் இவர்களுக்கு முக்கியம் என்று, நாம் கருத வாய்ப்பு கிடைத்திருக்குமே! எங்களுக்கு ஆயிரக்கணக்கில் புகார் கடிதங்கள் வந்துள்ளன. அவற்றிற்கு விளக்கம் தேவை என்று, உப்புசப்பு இல்லாத, சிறிதும் ஆதாரம் இல்லாத புகார்களை அடுக்கி சிதம்பரம் கோவில் பொதுதீட்சிதர் அமைப்பிற்கு அறநிலையத்துறையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

பொதுதீட்சிதர்களுக்கு ஆதரவாக வந்த, ஆயிரக்கணக்கான கடிதங்கள் குறித்து துறைவாயே திறக்கவில்லை.அந்தக் கடிதத்தில் கூறப்பட்ட புகார்கள் அனைத்திற்கும், 08.08.2022 தேதியிட்ட பதில் கடிதத்தை பொதுதீட்சிதர்களின் செயலர் அனுப்பி விட்டார். தேள் கொட்டிய திருடன் போல் அறநிலையத்துறை இந்த விஷயத்தில் அமைதி காத்தது.

தற்போது, வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையே சண்டை மூட்டி விட்டு, அதன் வாயிலாக, சிதம்பரம் தீட்சிதர்களுக்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்று தீவிரமாக அறநிலையத்துறை இறங்கிஉள்ளது.இவர்களுக்கு வேண்டிய ஆட்களை விட்டு கோரிக்கை வைத்தும், நீதிமன்றத்தில் விஷயங்களை மறைத்து வழக்கு போட்டும், எப்படியாவது தில்லைக் கோவிலில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு சட்டவிரோதமாக, சம்பிரதாய விரோதமாக, ஒரு பிரம்மோற்சவம் கொண்டாட முயற்சி மேற்கொள்கிறது.

குளிர் காயலாம்


அந்த சன்னிதிக்கு, எந்தக் காலத்திலும் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கு ஆதாரமே இல்லை. தில்லைக்கோவில் பெருமாள் விஷயமாக அசைக்க முடியாத ஆதாரம் என்னவெனில், 1,500 வருடங்களுக்கு முன்பாகவே, அந்தப் பெருமாளுக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் தான் வேதமுறைப்படி பூஜை செய்துள்ளனர். இந்த உண்மையை உறுதி செய்கின்றன, தில்லை சித்திரகூட ஸ்தலத்தில் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும், ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரும் பாடிய பாடல்கள்.

பிரம்மோற்சவம் என்பது, ஒரு கோவிலில் உள்ள மூலவருக்கு மட்டுமே நடைபெறுவது. உலகெங்கிலும் உள்ள சைவர்களுக்கு கோவில் என்றாலே சிதம்பரம் கோவில்தான். அந்தக் கோவிலில் உள்ள இறைவர் ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீநடராஜப் பெருமான். இவருக்கு ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீகோவிந்தராஜர் சன்னிதியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், பிரம்மோற்சவம் கிடையாது. எந்தக் காலத்திலும், இந்தப் பெருமாளுக்கு அந்தப் பெருவிழா எடுக்கப்பட்டதில்லை. தில்லைக்கோவிலில் ஸ்ரீகோவிந்தராஜர் சன்னிதியில் என்ன விசேஷங்கள், வைபவங்கள் கொண்டாடலாம் என்பது ஓ.எஸ். எண் 211/2018 என்ற வழக்கில் நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த விசேஷங்களை, விழாக்களை குறைப்பதோ, கூட்டுவதோ 1947ம் வருட தமிழ்நாடு கோவில் நுழைவுச்சட்டத்திற்கு விரோதம். தண்டனைக்கு உரிய குற்றம். சட்ட விரோத காரியங்களை செய்ய, என்றைக்குமே இந்தத் துறை தயங்கியதில்லை. சட்ட விரோதமாகத் தானே இவர்கள், பழனி, ஸ்ரீரங்கம், மதுரை, திருச்செந்துார், திருவண்ணாமலை, அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்களில், 70 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றனர்.

காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னிதிக்கும் பிரம்மோற்சவம் கிடையாது. அந்தப் பெருமாள் சன்னிதியும், ஒரு திவ்ய தேசம் தான்.இன்னும் சொல்லப் போனால் அந்தக் கோவிலில் ஸ்ரீநிலாத்துண்டப் பெருமாளுக்கு சிவாச்சாரியார்கள் தான் பூஜை செய்கின்றனர்.

அறநிலையத் துறையின் நோக்கம் - தமிழக ஹிந்துக்களுக்கு இடையே பிரச்னை, சண்டைகள் தோன்றட்டும்; நாம் அதில் குளிர் காயலாம். பிரம்மோற்சவம் குறித்து நீதிமன்றத்தையும், சட்டங்களையும் மதிக்காமல் உத்தரவு போடுவோம்.1991ம் வருட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்யும் வழிபாட்டு சர்ச்சை விஷயங்களை கையில் எடுப்போம்.

உயிர்மூச்சு


சிறுபான்மையர் பற்றி வாய்கிழிய பேசுவோம். அதேசமயத்தில், ஹிந்துக்கள் இடையே 20 நுாற்றாண்டு வரலாறு உடைய சின்னஞ்சிறு சமூகம் இருந்தால், அவர்களுக்கு எல்லாவிதமான இடர்பாடுகளையும் செய்வோம்- காரணம் அந்தச் சிறிய சமூகம் சிதம்பரம் தீட்சிதர் சமூகம் வேதநெறியின் உயிர்மூச்சு. சைவத்தின் அடையாளம்.

சைவ சமயத்தின் முதல் அடியாராக தேவாரத்திலும், பெரியபுராணத்திலும் போற்றப்படுபவர்கள். இவர்களை நசுக்குவதன் வாயிலாக, வேதத்தையும், சைவ சமயத்தையும் நாம் ஒருங்கே கொச்சைப்படுத்தலாம் என்பதே அறநிலையத் துறையின் நோக்கம் என்று அவர்களுடைய இந்தச் செயல்பாடுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

டி.ஆர். ரமேஷ்,

தலைவர்,

ஆலய வழிபடுவோர் சங்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us