'சைபர் கிரைம்' மோசடியில் இழந்த பணம் மீட்கும் நடைமுறையில் எளிமை தேவை
'சைபர் கிரைம்' மோசடியில் இழந்த பணம் மீட்கும் நடைமுறையில் எளிமை தேவை
ADDED : மே 10, 2024 04:16 AM

சென்னை : 'சைபர் கிரைம்' குற்றவாளிகளிடம் இழந்த பணத்தை மீட்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்' என, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'சைபர் கிரைம்' குற்றவாளிகள், விதவிதமான பொய்களை சொல்லி, 'ஆன்லைன்' வாயிலாக பணத்தை சுருட்டுகின்றனர். இந்த தொகையை மீட்கும் நடைமுறை எளிமையாக இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னையில் உள்ள, மாநில சைபர் கிரைம் பிரிவில் முறையிட்டு வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: சைபர் கிரைம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், ஒரு மணி நேரத்தில், 5 லட்சம் ரூபாயை, 1,200 வங்கி கணக்குகளுக்கு பிரித்து அனுப்பி விடுகின்றனர். இதற்காக, விபரம் தெரியாத சாதாரண மக்களை பயன்படுத்தி, 1,000 - 5,000 ரூபாய் வரை கொடுத்து, அவர்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கி விடுகின்றனர்.
சிக்கல்
இப்படி வங்கி கணக்குகள் துவங்கி தருவதற்கு என, தனியாக மோசடி கும்பல்கள் உள்ளன. ஒரு வங்கி கணக்கில் இருந்து பல வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று விடுவதால், அவற்றை முடக்கி பணத்தை மீட்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வங்கிகளோ, இழந்த பணம் பற்றி, 48 மணி நேரத்திற்குள் எங்களிடம் தெரிவித்து விட்டால் பணத்தை மீட்டு விடுவோம் என்று கூறி வருகின்றன. ஆனால், ஆண்டு கணக்கில் பணத்தை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ஏதாவது காரணம் சொல்லி அலைய விடுகின்றனர். வங்கிகளும் பணம் இழப்பு புகார்கள் மீது விரைந்து செயல்படுவது இல்லை; அலட்சியமாக செயல்படுகின்றன.
பணம் இழப்பு தொடர்பாக, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்றும், தங்களுக்கு நிர்வாக ரீதியாக நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுருட்டுகின்றனர்
முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தால் தான், எங்களால் பணத்தை மீட்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
அதற்குள், சைபர் கிரைம் குற்றவாளிகள் பணத்தை சுருட்டி விடுகின்றனர். போலீசாரும், வங்கி அதிகாரிகளும் இணைந்து பணம் மீட்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். அந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.