டில்லி உஷ்ஷ்ஷ்: அருங்காட்சியகமாகும் 'நார்த், சவுத் ப்ளாக்!'
டில்லி உஷ்ஷ்ஷ்: அருங்காட்சியகமாகும் 'நார்த், சவுத் ப்ளாக்!'
ADDED : ஆக 04, 2024 01:14 AM

புதுடில்லி: டில்லியில் பார்லிமென்ட், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவை உள்ள இடம், 'ராய்சீனா ஹில் பகுதி' என, அழைக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வலப்புறம், இடப்புறம் என இரண்டு பக்கமும், 'சவுத் ப்ளாக், நார்த் ப்ளாக்' என, இரண்டு பெரும் கட்டடங்கள் உள்ளன.
இதில் சவுத் ப்ளாக்கில் பிரதமர் அலுவலகம், ராணுவ அமைச்சகம், வெளியுறவுத்துறை அலுவலகங்களும், நார்த் ப்ளாக்கில் நிதி அமைச்சகம், உள்துறை, உளவுத்துறை என சென்சிடிவ் ஆன அலுவலகங்களும் உள்ளன; விரைவில், இந்த இரண்டு கட்டடங்களும் அருங்காட்சியகமாக மாற உள்ளதாம்.
புதிய பார்லிமென்ட் உட்பட, மத்திய அரசு அலுவலகங்களுக்கான கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன; இவை அனைத்தும் ஒரே பகுதியில் இருக்கும்; இதை, 'சென்ட்ரல் விஸ்டா' என, அழைக்கின்றனர்.
பிரதமருக்கான அலுவலகமும், வீடும் இங்கு தான் இருக்கும். இதற்கான கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள, தன் புதிய வீட்டிற்கு, ஏற்கனவே, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குடிவந்து விட்டார்.
பிரதமரின் புதிய வீட்டு வேலைகள் இந்த ஆண்டு -அக்டோபருக்குள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது; அப்போது இங்கு குடியேறிவிடுவார் மோடி. 2026ல் மற்ற மத்திய அரசு அலுவலகங்களும் தயாராகிவிடும் என சொல்லப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன் ஆகியோர், நார்த் ப்ளாக்கில் தங்களுடைய அலுவலகத்திலிருந்து, புதிய அலுவலகத்திற்கு மாறுவர். அதே போல, சவுத் ப்ளாக்கில் உள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் புதிய அலுவலகங்களுக்கு செல்வர். இந்த புதிய கட்டடங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருக்கும்.
காலியாகும் நார்த், சவுத் ப்ளாக் கட்டடங்களை, அருங்காட்சியகமாக மாற்ற மோடி முடிவெடுத்துள்ளாராம்; இதற்கான வேலைகளும் துவங்கி விட்டதாம்.