ஆக்கிரமிப்பு, நெரிசலில் அல்லாடும் கொடைக்கானல் ஏரி சாலை
ஆக்கிரமிப்பு, நெரிசலில் அல்லாடும் கொடைக்கானல் ஏரி சாலை
ADDED : ஏப் 23, 2024 12:21 AM

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு, நெரிசலுடன் காட்சியளிக்க தினம் தினம் உருவாகும் கடைகளால், இங்கு வரும் சுற்றுலா பயணியர் பெரும் தொல்லைக்கு ஆளாவதோடு, ஏரிச்சாலை என்று தான் அழகு மிளிருமோ என ஏக்கத்துடன் செல்லும் நிலை தொடர்கிறது.
மலைகளின் இளவரசிஎன அழைக்கப்படும் கொடைக்கானலின் மையத்தில் இருப்பது ஏரி. மன அழுத்தத்தோடு உள்ளவர்கள் இந்த ஏரி சாலையில் வரும் போது இயற்கை எழில் சூழ்ந்த 5 கி.மீ., சுற்றுப்பாதையில் தங்கள் மனதை பறிகொடுத்து செல்கின்றனர்.
கார் பார்க்கிங்
ஏரியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்கு கட்டுமானங்கள் கட்ட அனுமதி இல்லை. இருந்த போதும் விதிமீறல்கள் தொடரத் தான் செய்கின்றன.
1863ல் ஏரியை சுற்றி நடைபாதை கடைகள் வாயிலாக இங்குள்ள ஒரு சிலர் பிழைப்பு நடத்தினர். இதன் வாயிலாக வருவாய் கிடைக்க, புற்றீசல் போல் ஏராளமான கடைகள் உருவாகின.
நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் நோக்கில், 2006ல் அப்போதைய நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற மேலும் கடைகள் உருவாகின.
ஏரியின் சுற்றுச் சாலைகள் அனைத்தும் நெடுஞ்சாலை துறை வசம் இருந்தாலும், நெடுஞ்சாலைத்துறை இடத்தில் நகராட்சி நிர்வாகம் கடைகளை தரை வாடகைக்கு விடுகிறது.
துவக்கத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட கடைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது, 500க்கும் மேற்பட்ட கடைகள்உள்ளன.
நகராட்சி நிர்வாகம் மாறும் போதெல்லாம் கடைகள் உருவாக தொடங்கின. எழில் மிகுந்த ஏரி சாலையில் ஒரு புறம் கடைகள், மறுபுறம் கார் பார்க்கிங் என, இதன் நடுவில் தான் நெருக்கடியில் பயணியர் பயணிக்கின்றனர்.
நெரிசலுக்கு மத்தியில் குதிரை, சைக்கிள் சவாரி செய்வோர், இடியாப்ப சிக்கலில் சிக்கி நொந்து கொள்கின்றனர். இயற்கையை அனுபவிக்க வந்தவர்களுக்கு வாகன புகை, சுற்றுச் சூழல் பாதிப்பு, கட்டுமான பொருட்கள் குவிப்பு, ஆக்கிரமிப்பு நிறைந்து மன உளைச்சலை தான் ஏற்படுத்துகிறது.
நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் இதை கண்டுகொள்வதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காதா என, சுற்றுலா பயணியர் ஏங்குகின்றனர்.
ஆட்சியாளர்களின் தயவால் ஆண்டுதோறும் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, இவற்றை சிலர் சட்ட விரோதமாக உள்வாடகைக்கு விட்டு லாபம் ஈட்டுகின்றனர். இது போதாதென்று, ரோட்டோரங்களில் கடைகளை வைத்து மாதந்தோறும் வருவாய் ஈட்டுகின்றனர்.
இதையும் நகராட்சி கண்டுகொள்வதில்லை. இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. இதை ஒழுங்குபடுத்தவும் யாரும் தயாராக இல்லை.
ஒரு காலத்தில் நன்னீர் ஏரியாக இருந்த கொடைக்கானல் ஏரி, தற்போது சுகாதாரக்கேடுடன் மாசடைந்து வருகிறது. பெய்யும் மழைநீர் நேரடியாக ஏரியில் விழாமல், கழிவு நீருடன் கலக்கிறது.
எதிர்பார்ப்பு
ஒவ்வொரு முறையும் ஏரியை அழகுபடுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும், அதன் தரம் உயர்ந்த பாடில்லை. தற்போதும், 24 கோடி ரூபாயில் ஏரியை புனரமைக்கும் பணி நடக்கிறது.
இதுவும் அரைகுறை நிலையில் தரமற்று நடக்கிறது. இது ஒருபுறம் என்றால், நெடுஞ்சாலைத்துறை தன் பங்கிற்கு மழை நீர் வாய்க்கால் அமைத்து ஏரிச்சாலை ரோட்டை சுருங்க செய்துள்ளது.
எது, எப்படியோ சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்புக்கு இணங்க ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் இல்லாது கொடைக்கானல் ஏரி சாலை அழகு மிளிர வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பழனி முருகன் கோவில் அடிவார ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் தலையிட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது போன்ற நிலை, கொடைக்கானலுக்கு வராதிருக்க மாவட்ட நிர்வாகம் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
- நமது சிறப்பு நிருபர் -.

