யானை வழித்தட புதிய சட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு
யானை வழித்தட புதிய சட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு
UPDATED : மே 15, 2024 04:56 AM
ADDED : மே 14, 2024 11:51 PM

யானை வழித்தட புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், வனத்துறையானது தங்களை ஆலோசிக்காது செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
வன விலங்கு வழித்தட பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவை, ராம் நகரில் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது: விவசாய நிலங்களில் யானை வழித்தடம் சம்பந்தமாக, புதிய சட்டம் இயற்றுவதற்கு சமீபத்தில் வனத்துறையானது குறுகிய காலத்தில் கருத்து கேட்டு, 140 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. விவசாயம் தொடர்பான பிரச்னையை எங்களிடம் ஆலோசிக்காது கருத்து கேட்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.
சுதந்திரத்துக்கு பின் நேர்மையான வன அதிகாரிகளால், வனப்பகுதிகளில் கேளிக்கை விடுதிகள் உட்பட எந்த கட்டுமானங்களும் உருவாகவில்லை. கடந்த, 40 ஆண்டுகளாக பணிபுரிந்த வன அதிகாரிகள் வன எல்லைக்குள் இதுபோன்ற கட்டுமானங்களை தடுக்க தவறியதால், யானை வழித்தடங்கள் தடைபட்டு, வெளியே வந்து விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.
அதை தடுக்கவும் அரசு நிதி ஒதுக்கியது. அதையும் அதிகாரிகள் சரியாக செயல்படுத்தாததால், உணவுக்காகவும், தண்ணீர் தேடியும் வெளியே வருவதாக கூறுகின்றனர்.
யானைகளால் விவசாய நிலத்தில் ஏற்படும் சேதத்துக்கும் சரியாக இழப்பீடு கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகிறோம்.
யானை வழித்தடம் புதிய சட்டம் கொண்டுவந்தால் எதிர்காலத்தில் புரட்சி வெடிக்கும். விவசாயம் குறித்து வனத்துறையினரோ, சமூக ஆர்வலர்களோ கவலைப்படுவதில்லை. விவசாயம் அழிந்து வரும் நிலையில், இனியாவது அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி, ஜூலை, 5ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம். தமிழகத்தில் வனத்துக்கு வெளியே,
40 வழித்தடங்கள் இருப்பதாக வனத்துறை கூறுகிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

