ஐந்து குழுக்கள் தாங்க; முடியாது மூணு தான் தருவோம்: காங்கிரஸ், பா.ஜ., மோதல்
ஐந்து குழுக்கள் தாங்க; முடியாது மூணு தான் தருவோம்: காங்கிரஸ், பா.ஜ., மோதல்
ADDED : ஆக 30, 2024 03:30 AM

பா.ஜ.,வுக்கும், காங்.,கிற்கும் இடையில் கடும் இழுபறி நீடிப்பதால், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பார்லிமென்ட் நிலைக் குழுக்களை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து பட்ஜெட் கூட்டத் தொடரும் நிறைவு பெற்று விட்டது. இந்நிலையில், பல்வேறு சட்ட மசோதாக்களை ஆய்வு செய்ய வேண்டியதற்காக நிலை குழுக்கள் உட்பட பல்வேறு அலுவல் ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டாக வேண்டும்.
இந்த குழுக்களின் உறுப்பினர்களாக ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எம்.பி.,க்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களில் மிகவும் முக்கியமானவை, பார்லிமென்ட் நிலைக் குழுக்கள்.
இதன்படி, முக்கியமான அமைச்சகங்கள் ஒவ்வொன்றிற்கும் நிலைக்குழு அமைக்கப்படுவது உண்டு. பார்லிமென்ட்டில் தாக்கலாகி விவாதத்துக்கு உள்ளாகும் முக்கிய மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்போ அல்லது ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால், அந்த மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்தகைய பலம் வாய்ந்த நிலைக் குழுக்களை கைப்பற்றுவதற்கும், அதன் தலைவராவதற்கும் முக்கிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்படும். ஆனால், எம்.பி.,க்களின் பலத்திற்கு ஏற்பவே நிலைக் குழுக்கள் பகிர்ந்தளிக்கப்படுவது வழக்கம்.
லோக்சபா நிலைக் குழுக்கள், ராஜ்யசபா நிலைக் குழுக்கள் என இரு வேறு பிரிவுகள் உள்ளன. அதில், லோக்சபா சார்பில் 16 நிலைக் குழுக்களும், ராஜ்ய சபாவின் சார்பில் எட்டு நிலைக் குழுக்களும் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்த குழுக்களை பகிர்ந்து கொள்வதில்தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த 24 நிலைக் குழுக்களில் நான்கு லோக்சபா நிலைக் குழுக்களையும், ஒரு ராஜ்யசபா நிலைக் குழுவையும் தங்களுக்கு தர வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளும் தரப்பான பா.ஜ.,வோ, மொத்தமே மூன்று நிலைக் குழுக்கள் மட்டும் காங்கிரசுக்கு வழங்க முடியும் என தெரிவித்துவிட்டது. இது தவிர, 'இண்டி' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு நிலைக் குழு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையில் ஏற்பட்டு உள்ள இந்த மோதலால், நிலைக் குழுக்கள் அமைக்கும் நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் நோக்கில் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேஹ்வால், காங்கிரஸ் லோக்சபா துணைத் தலைவர் கவுரவ் கோகோய், காங்கிரஸ் மூத்த எம்.பி.,க்கள் கொடிக்குன்னில் சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில், காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு ஐந்து நிலை குழுக்கள் தந்தாக வேண்டும் என்று, தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிலைக் குழுவை தங்களுக்கு அளித்தாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், பார்லிமென்ட் குழுக்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவான பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பதவி, காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளதை அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனாலும், காங்கிரஸ் இதை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.
நிலைக் குழுக்கள் அமைக்கப்படும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிற முக்கிய கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவிக்க துவங்கியுள்ளன.
திரிணமுல் காங்கிரஸ் மூத்த எம்.பி., டெரக் ஒ பிரையன் சார்பில் ராஜ்யசபா செயலகத்திற்கு எழுதிய கடிதத்தில், நிலைக்குழு அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தவிர, பிற முக்கிய கட்சிகளின் சார்பிலும் அதிருப்தி குரல்கள் கிளம்பியுள்ளன. இதனால், நிலைக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் குறித்து பெரிய அளவில் அரசியல் ரீதியான பிரச்னைகள் விரைவில் வெடிக்கலாம் என கூறப்படுகிறது.
-நமது டில்லி நிருபர்-

