UPDATED : செப் 19, 2024 04:42 AM
ADDED : செப் 18, 2024 08:42 PM

பொள்ளாச்சி : மரங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த, மரம் தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே, 40 ஏக்கர் பரப்பில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த மரம் தங்கசாமி, 'வாழ்வோம் மரங்களுடன்' என்ற தாரக மந்திரத்துடன் டிம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தியவர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றி காட்டியவர்.
அவர், காவேரி கூக்குரல் இயக்கத்தின் தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல்புரிந்தவர். இந்நிலையில், அவரின் சேவையை நினைவு கூரும் விதமாகவும், அவரின் நினைவுநாளில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும் 86 விவசாயிகளின் நிலங்களில் சுமார், 691 ஏக்கர் பரப்பில், ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 828 டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் வாயிலாக நடவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி அருகே தேவராயபுரத்தில், 40 ஏக்கர் பரப்பில், ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
காவேரி கூக்குரல் இயக்கத்தினர் கூறியதாவது:
தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை, விவசாய நிலங்களில் நட்டு வளர்ப்பதன் வாயிலாக விவசாயிகளின் வருமானம் பெருகி வருகிறது.
விவசாயிகளுக்கு உணவுக் காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், மசாலா மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வரும் டிச., 22ல், 'மரங்களுக்கு இடையே விவசாயம்; மகத்தான வருமானம்' என்ற சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
ஈஷா நர்சரிகளில் விவசாயிகளுக்கு ரூ.3க்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை பெறவும், பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, கூறினர்.

