அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகிக்கு முன்னாள் அமைச்சர் 'பளார்'
அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகிக்கு முன்னாள் அமைச்சர் 'பளார்'
ADDED : மார் 07, 2025 04:47 AM

விருதுநகர் : விருதுநகரில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க., பொதுக் கூட்டத்தில் சால்வை அணிவிக்க வந்த எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணை செயலர் நந்தகுமாரை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் விருதுநகரில், நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாண்டியராஜன் ஆகியோருக்கு, கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து சால்வை அணிவித்தனர்.
அனைவரும் வரிசையில் நின்று சால்வை அணிவித்துக் கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர்., மன்ற விருதுநகர் ஒன்றிய துணை செயலர் நந்தகுமார், வரிசையில் வராமல் குறுக்கே வந்து, சால்வை அணிவிக்க முயன்றார்.
அதை கண்ட ராஜேந்திர பாலாஜி, மற்றவர்களை தள்ளிவிட்டு மேடையேறிய நந்தகுமார் கன்னத்தில் அறைந்தார். கூடவே கீழே இறங்கிச் சென்று, வரிசையில் வந்து சால்வை அணிவிக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, மேடையில் இருந்து கீழே இறங்கிய நந்தகுமார், கன்னத்தை தேய்த்தபடியே வெளியேறினார்.
இது ஒருபுறம் இருக்க, பொதுக்கூட்டம் முடியும் வரை பாண்டியராஜனுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், பொதுக்கூட்டம் நிறைவடைந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், அப்பகுதியில் இருந்து வெளியேறினார்.