தங்க பத்திர திட்டத்தால் அதிகரிக்கும் அரசின் செலவு
தங்க பத்திர திட்டத்தால் அதிகரிக்கும் அரசின் செலவு
ADDED : ஆக 16, 2024 11:29 PM

புதுடில்லி:தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தங்க பத்திர திட்டங்களால், அரசின் செலவு அதிகரித்துள்ளது. மேலும், நாட்டின் தங்க இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கமும் நிறைவேறியதாகத் தெரியவில்லை.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, கடந்த 2015ம் ஆண்டு, தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை அறிவித்தது.
இதன்படி 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், முதல் தவணை தங்க பத்திரம் வெளியிடப்பட்டது. அதோடு சேர்த்து, இதுவரை 67 தவணைகளாக தங்க பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 72,274 கோடி ரூபாய் திரட்டப்பட்டுஉள்ளது.
அதிகரிக்கும் விலை
இந்நிலையில், தங்கத்தின் விலை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், முதிர்வின்போது வழங்க வேண்டிய தொகை, இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
மேலும், எட்டு ஆண்டுகள் கழித்து முதலீடு முதிர்வடைந்து, முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு, மூலதன ஆதாய வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசின் வருவாய் மற்றும் செலவினத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரட்டிப்பான முதலீடு
அதேவேளையில், முதலீட்டாளர்களை பொறுத்தவரை, இத்திட்டம் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இதுவரை முதிர்வடைந்துள்ள நான்கு திட்டங்களுமே, முதலீட்டாளர்களின் முதலீடுகளை இரட்டிப்பாக்கி உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரியை அரசு 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தது.
இதனால் தங்கத்தின் விலை குறைந்து, அரசு முதலீட்டாளர்களுக்கு முதிர்வுக்குப் பின் வழங்க வேண்டிய தொகையும் சற்றே குறைந்துள்ளது.
அரசின் இந்த முடிவால், தங்கத்தின் விலை குறைந்துள்ள போதிலும், அது முதலீட்டாளர்களின் லாபத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு, கிட்டத்தட்ட 100 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.
இந்த பத்திரம் வெளியிடப்பட்டபோது ஒரு கிராம் தங்கம் 3,499 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 7,000 ரூபாய் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு இறுதிக்குள், இன்னும் இரண்டு திட்டங்கள் முதிர்வடைய உள்ள நிலையில், 22 திட்டங்களில், முதிர்வுக்கு முன்னதாக முதலீடுகளைப் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவேறாத நோக்கம்
வரும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் முதிர்வடைய உள்ள திட்டங்களில், எட்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு கிராம் தங்கம் முறையே 3,007 மற்றும் 3,150 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
நிதிச்சுமை அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாமல், தங்கத்தின் இறக்குமதியை குறைக்கவேண்டும் என்ற இத்திட்டத்தின் நோக்கமும் நிறைவேறியது போன்று தெரியவில்லை.
உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, நாட்டின் தங்க இறக்குமதி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் பாதியில் 16 சதவீதம் அதிகரித்து, 376 டன்னாக உள்ளது.
இதற்கிடையே தங்க பத்திர திட்டம் நிறுத்தப்படாது என்றும், வரும் காலங்களில் வெளியிடப்படும் பத்திரங்களின் அளவு குறைக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.