UPDATED : மே 22, 2024 10:23 AM
ADDED : மே 21, 2024 11:37 PM

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில், மழைகாலத்தில் அரசு பஸ்களை எப்படி இயக்க வேண்டும் என்ற வழிகாட்டி நெறிமுறைகளை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலரும், போக்குவரத்துத்துறை தலைவருமான பனீந்திரரெட்டி வகுத்துக்கொடுத்துள்ளார்.
அவை வருமாறு:
பஸ் டெப்போவிலிருந்து பஸ்களை வெளியே எடுப்பதற்கு முன், கிளாஸ் வைப்பர் (கண்ணாடி துடைப்பான்) மற்றும் முகப்பு விளக்குகள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கனமழை பெய்யும் போது, போதிய இடைவெளியில் இயக்குவது அவசியம்.
சாலையின் இடது பக்கம் பஸ்சை இயக்கும் போது, சாலையை விட்டு அதிக ஓரமாக செல்லாமல் கவனமாக இயக்க வேண்டும். சாலையில் மின்கம்பங்கள், மரங்கள் ஏதேனும் விழுந்துள்ளதா என்பதை கவனிப்பது மிக முக்கியம்.
சாலையில் தேங்கியுள்ள மழைநீர், தாழ்வான பாலங்கள், மதகுகள், சுரங்கப்பாதைகளை கடக்கும் போது தண்ணீர் தேங்கியிருந்தால், அந்த வழியை பயன்படுத்த வேண்டாம். மாற்றுப்பாதையில் செல்லும் போது, பாதையில் வழுக்கல் இருக்கிறதா சேறும் சகதியும் இருக்கிறதா என்பதை பார்த்து, யூகித்தே எச்சரிக்கையாக செல்ல வேண்டும்.
சூறாவளி, கனமழை, வெள்ளம் போன்ற அரசு அறிவிக்கும் முன்னறிவிப்பு நிலைமைகளுக்கு ஏற்ப, வாகன இயக்கத்தை திட்டமிட்டு இயக்க வேண்டும்.
பி.எஸ்., 6 வகை பஸ்கள், சைலன்சர் பைப் மிகவும் தாழ்வாக உள்ளதால், எளிதில் தண்ணீர் நுழைய வாய்ப்புகள் அதிகம். மிகுந்த கவனத்துடன் பஸ்களை இயக்குவது அவசியம்.
இவ்வாறு, கோவையிலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

