கோவையில் சட்டவிரோத 'நம்பர் லாட்டரி': போலீசுக்கு 'சார்ஜ்' ஆகுது 'மாமூல் பேட்டரி'
கோவையில் சட்டவிரோத 'நம்பர் லாட்டரி': போலீசுக்கு 'சார்ஜ்' ஆகுது 'மாமூல் பேட்டரி'
ADDED : ஆக 04, 2024 05:12 AM

கோவையில் சட்ட விரோத கும்பலுடன் போலீசார் இணைந்து செயல்படுவது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதித்த பின், அதன் விற்பனை பல வழிகளில் உருமாறியுள்ளது. தற்போது, கேரளா மற்றும் நாகாலாந்து லாட்டரி முடிவுகளை வைத்து, 'நம்பர்' லாட்டரி சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. அரசியல்வாதிகள், சமூக விரோதிகள், போலீசார் இணைந்து லாபம் பார்க்கின்றனர். லாட்டரி நடத்தும் புள்ளிகள் நகர், கிராமங்களில் ஏஜன்ட்களை நியமித்து, சமூக வலைதளங்களில் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
கோவை புறநகரில் போலீசார் ஆசியுடன் காணும் இடமெல்லாம் 'நம்பர் புக்கிங்' கடைகளை ரகசியமாக திறந்துள்ளனர். பேரூர், மாதம்பட்டி, தொண்டாமுத்துார், பூலுவபட்டி, ஆலாந்துறை என, பல கிராமங்களில் லாட்டரி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 'புக்' செய்த ஒரு நம்பர் 'ரிசல்ட்'டில் இருந்தால், ரூ.100, நான்கு நம்பரும் இருந்தால், ரூ.4.5 லட்சம் பரிசு என, அறிவித்துள்ளனர்.
இதனால், கூலி வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் 'நம்பர்'களை 'புக்' செய்வதற்கு வரிசை கட்டி நிற்பதை காண முடிகிறது. மாதம்பட்டி - சிறுவாணி ரோட்டில் இரண்டு கடையும், ஒரு தோட்டத்தில் 'ஷெட்' அமைத்தும் விற்பனையை பகிரங்கமாக நடத்தத் துவங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மாமூலாக மாதம், ரூ.50 ஆயிரம் வரை ஒவ்வொரு ஏஜன்ட்களும் வழங்குவதாக கூறப்படுகிறது.
சிறு விவசாயிகள், வியாபாரிகளை குறிவைத்து பூலுவப்பட்டி, தொண்டாமுத்துார் சந்தைகளில், 14 பேர் கொண்ட கும்பலை நியமித்துள்ளனர். இக்கும்பலை ஒருங்கிணைத்து விற்பனையை அதிகரிக்க, கமிஷன் அடிப்படையில், ஒருவரை நியமித்துள்ளனர். இவ்விவரம் லோக்கல் ஸ்டேஷன் போலீசார், கோவை மாவட்ட எஸ்.பி.சி.ஐ.டி.,மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் எனும் தனிப்பிரிவு போலீசாரும் நன்கறிந்த ரகசியம்.
-நமது நிருபர்-