எங்களை நிம்மதியாக படிக்க விடுங்களேன்!: கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்
எங்களை நிம்மதியாக படிக்க விடுங்களேன்!: கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்
ADDED : ஜூன் 25, 2024 12:43 AM

கள்ளக்குறிச்சி நகரின் ஒரு பகுதிதான் கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்த கருணாபுரம். பெயின்டர்கள், மூட்டை துாக்குவோர் என, உடல் உழைப்பு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது.
கதவுகளுக்கு பதிலாக போர்வைகளும், சாக்குகளும் இருக்கும், அதிர்ந்து பேசினால் உதிர்ந்து போகும் காரை வீடுகளே இங்கு அதிகம். அன்றாடம் உழைத்து பிழைக்கும் இப்பகுதிவாசிகள், ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்தால் அதுவே அதிகம்.
இங்கு வசிப்பவர்கள், நல்ல நிகழ்வு, கெட்ட நிகழ்வு என எது நடந்தாலும், கள்ளச்சாராயம் வாயிலாக தான், அதை பகிர்ந்து கொள்வர்; அதாவது, பெரும்பாலானோருக்கு கள்ளச்சாராயம் குடிக்கும் பழக்கம் உண்டு.
கள்ளக்குறிச்சியில் நிறைய டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அங்கே வாங்கி சாப்பிடும் அளவிற்கு வசதி கிடையாது; அதில், 'திருப்தியும்' கிடையாது. மேலும், இங்கு 24 மணி நேரமும் தடையின்றி கள்ளச்சாராயம் கிடைப்பதால், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை தேடுவதும் கிடையாது.
இப்படித்தான், இம்மாதம், 19ம் தேதி ஒரு இறப்பு வீட்டில் துக்கத்துடன் சரக்கையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, சரக்கு துாக்கலாக இருக்கிறதே என்று எண்ணுவதற்குள் கண் இருட்டியது, வயிறு குமட்டியது.
'அய்யோ... அம்மா... என்னைய என்னவோ செய்யுதே, காப்பாத்துங்களேன்' என்ற கதறல் சொல்லி வைத்தார் போல, கள்ளச்சாராயம் குடித்த அனைவரின் வீடுகளிலும் கேட்டது.
விபரீதத்தின் வீரியத்தை உணராமல், சாதாரண வயிற்றுப்போக்கு என்று கலெக்டர் சப்பைக்கட்டு கட்ட, 10, 20 பேர் மதியத்திற்குள் பொத்து பொத்தென்று செத்து விழுந்த பின் தான், சம்பவத்தை கள்ளச்சாராய பலி என உறுதி செய்தனர்.
கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிப்புக்கு ஆளானவர்கள் பலர், இன்னமும் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் ஆபத்தான கட்டத்தில் தான் உள்ளனர்.
ஊரின் ஆரம்பத்தில் ஏதாவது பிளக்ஸ் பேனர் புதிதாக கட்டுகின்றனர் என்றால், சிகிச்சையில் இருந்தவர்களில் ஓரிருவர் அன்றைக்கு இறந்து விட்டனர் என்றே அர்த்தம்.
இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை, அரசு அறிவித்த, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தான், ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.
இங்குள்ள ஆண்கள், பெண்கள் யாருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை; ஆனாலும், அடுத்த தலைமுறையாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், வீட்டில் உள்ள பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர்; இப்போது அந்தப் பிள்ளைகள் தான், பாவம் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மீடியாக்கள் முன் அழத்தெரியாமல் இறுகிய முகத்துடன் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் அமர்ந்திருக்கின்றனர்.
பெரும்பாலான பிள்ளைகள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் உள்ளனர். இறுக்கத்தை உடைத்து அவர்களில் சிலர், எங்களை படிக்க விடுங்க... எங்க அப்பா அதுக்கு தான் ஆசைப்பட்டார் என கதறுகின்றனர்.
இந்த கதறல்கள் தான் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
- நமது நிருபர் -