உயிரற்று கிடக்கும் வேலைவாய்ப்பு அரசாணை: வேதனையில் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
உயிரற்று கிடக்கும் வேலைவாய்ப்பு அரசாணை: வேதனையில் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
ADDED : மார் 08, 2025 01:00 AM

அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கும் அரசாணை, இரண்டு ஆண்டுகளாக உயிரற்று கிடப்பதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேசிய பார்வையற்றோர் இணைய தென்னிந்திய திட்ட இயக்குநர் மனோகரன் கூறியதாவது:
ஒவ்வொரு நிதியாண்டும், மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட் அறிவிக்கும்போது, மாற்றுத்திறனாளிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பர்.
ஆனால், பட்ஜெட் தயார் செய்யும்போது, பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளை அரசு அழைத்து பேசுவதுண்டு. துரதிருஷ்டவசமாக மாற்றுத்திறனாளிகளை அழைக்க தவறுகின்றனர்; மறுக்கின்றனர்.
தமிழகத்தில், 21 வகையான, 10 லட்சம் பார்வையற்றோர் உட்பட, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கும் எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் உண்டு.
அதற்கான தீர்வை பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத பராமரிப்பு தொகையாக, 1,500 ரூபாய்க்கு மிகக்குறைந்த தொகை வழங்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களில், 3,000, முதல் 6000 ரூபாய் வரை உதவித்தொகை தரப்படுகிறது. தமிழகத்தில் 5,000 ரூபாயாக உதவித்தொகையை உயர்த்த கோரி வருகிறோம். கடந்த 2023 ஜூலை 24ம் தேதி தமிழக அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக அரசாணை, 20ஐ வெளியிட்டது.அந்த அரசாணை உயிரற்று கிடக்கிறது. அதற்கு உயிர்கொடுத்து உடனடியாக, அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை கண்டறிந்து, சிறப்பு தேர்வுகள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்.
தற்காலிக பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் அனைத்து வகை பொருட்களும் இலவசம் என, 24 வகை கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -