UPDATED : ஆக 14, 2024 06:58 AM
ADDED : ஆக 13, 2024 08:50 PM

ஒரு காலத்தில், டில்லியில் மத்திய அரசுக்கும், கர்நாடகாவுக்கும் பாலமாக திகழ்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார். அவர் மறைவுக்கு பின், தற்போது மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அந்த பொறுப்பை ஏற்று நடத்துகிறார்.
கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு மிகவும் கஷ்டம் ஏற்பட்ட கால கட்டத்தில் தான், 2012ல் அவருக்கு மாநில தலைவர் பதவி கிடைத்தது.
கடந்த 2004, 2009, 2014, 2019, 2024 என ஐந்து முறை தொடர்ந்து தார்வாட் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், இரண்டாவது முறை மத்திய அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
முன்னேறிய ஜோஷி
ஒரு காலத்தில் இவரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். பிரஹலாத் ஜோஷி தொடர் வெற்றிக்கு எடியூரப்பாவும் ஒரு காரணம் என்பது பா.ஜ., பிரமுகர்களுக்கு தெரியும்.
ஆனால், இடையில் லஞ்ச புகாரில் சிக்கி, அவர் பதவியை இழந்த போது, பிரஹலாத் ஜோஷி அசைக்க முடியாத தலைவராக தன்னை உயர்த்தி கொண்டார்.
அதன்பின், இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. 2019ல் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா முதல்வரான போதும், பெயர் அளவுக்கு மட்டுமே இருவரும் பேசி வந்தனர்.
ஆனால், காங்கிரஸ் அரசை கண்டித்து, சமீபத்தில் மேற்கொண்ட மைசூரு பாதயாத்திரையின் போது, இருவரும் பழையபடி மீண்டும் நெருக்கமாக இருப்பதை காண முடிந்தது.
பெங்களூரு கெங்கேரியில் நடந்த துவக்க விழாவிலும், மைசூரில் நடந்த நிறைவு விழாவிலும், பிரஹலாத் ஜோஷி பேசும் போது, எடியூரப்பாவையும், அவரது மகனும், தற்போதைய மாநில தலைவருமான விஜயேந்திராவையும் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார்.
வார்த்தைக்கு வார்த்தை விஜயேந்திரா, திறமையான தலைவர், அவரது தலைமையில் பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது என்று புகழ்ந்து தள்ளினார்.
புதிய யோசனை
ஆரம்ப கட்டத்தில், பாதயாத்திரைக்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா அனுமதி அளிக்கவில்லையாம். அப்போது, மைசூரு மண்டலத்தில் பாதயாத்திரை நடத்துவதன் மூலம், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரின் செல்வாக்கை குறைக்கலாம் என்று நட்டாவிடம், பிரஹலாத் ஜோஷி தான் யோசனை கூறினாராம்.
அதன் பின்னரே, விஜயேந்திராவை டில்லிக்கு வரவழைத்து, நட்டா, அமித் ஷா ஆகியோர் பேசி திட்டம் வகுத்து கொடுத்துள்ளனர்.
மேலும், அதிருப்தியில் இருந்த மத்திய அமைச்சர் குமாரசாமியையும், பிரஹலாத் ஜோஷி தான் சமாதானப்படுத்தி உள்ளார்.
நிம்மதி
பாதயாத்திரை முடிந்த பின்னரும், விஜயேந்திராவை தொடர்பு கொண்டு, 'மிகவும் வெற்றி கரமான பாதயாத்திரையை நடத்தி உள்ளீர்கள்; உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்' என்று தட்டி கொடுத்தாராம்.
இதை பொறுத்து கொள்ள முடியாத, சில மூத்த தலைவர்கள், தங்களை மீறி மேலே சென்று விடுவாரோ என்று ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.
முன்பை விட எடியூரப்பாவும், பிரஹலாத் ஜோஷியும் நெருக்கமாக இருப்பதால், கட்சி மேலிடம் சற்று நிம்மதியாக இருக்கிறது.
இவர்களை வைத்து, அதிருப்தி தலைவர்களை சரிகட்டுவதற்கும் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
- நமது நிருபர் -

