ADDED : ஜூன் 08, 2024 01:08 AM

பார்லிமென்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மைய மண்டபத்தில், மொத்தம் 13 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில், நடுநாயகமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கை போடப்பட்டிருந்தது.
அவருக்கு இடப்புறமாக சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே, ஜிதன்ராம் மஞ்சி, சிராக் பஸ்வான், அனுப்பிரியா படேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். வலதுபுறமாக பா.ஜ., தலைவர் நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அஜித் பவார், குமாரசாமி, பவன் கல்யாண் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
ஏழுமலையான் படம்
பிரதமர் மோடி பேசி முடித்ததும், அவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் மலர்கொத்து அளித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, திருப்பதி கோவில் லட்டுகள் அடங்கிய பை மற்றும் ஏழுமலையானின் பெரிய புகைப்படம் போன்றவற்றை அளித்து சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முகங்கள்
இந்த கூட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.பி.,க்கள் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் மற்றும் ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக பா.ஜ., பிரபலங்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரை காண முடிந்தது.
பெயர் தெரியாமல் தவிப்பு
பார்லிமென்ட் மைய மண்டபத்திற்குள் அனைத்து தலைவர்களும் வந்து அமர்ந்து விட்ட நிலையில், கடைசியாக பிரதமர் வருவதில் சற்று தாமமானது. இதனால், பிரதமர் வரும் வரை, 15 நிமிடங்கள் வரையில், மண்டபத்தில் அமைதி நிலவியது.
அப்போது, நாடு முழுதும் இருந்து வந்திருந்த தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவர்கள் பெயர்களை மைக்கில் சொல்லி, அமைச்சர் பூபீந்தர் யாதவ் அறிமுகப்படுத்தினார்.
தமிழக தலைவர்கள் என்று வந்தபோது, அவருக்கு யார் பெயரும் தெரியவில்லை. பன்னீர்செல்வத்தை அழைத்த போது கூட முன்னாள் முதல்வர் என்று கூறிவிட்டு பெயர் தெரியாமல் தவித்தார். இதனால், அனைவரும் எழுந்து, வெறுமனே வணக்கம் வைத்து அமர்ந்தனர்.
அத்வானி, ஜோஷியிடம் ஆசி
ஜனாதிபதியை சந்திக்க செல்லும் வழியில், கட்சியின் முன்னோடிகளான அத்வானி(96), முரளி மனோகர் ஜோஷி(91) ஆகியோரின் வீடுகளுக்கு சென்று, மோடி ஆசி பெற்றார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்தார்
- நமது டில்லி நிருபர் -.