எத்தனால் உற்பத்திக்கு புதிய பயிர் ரகம்: இறுதிகட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
எத்தனால் உற்பத்திக்கு புதிய பயிர் ரகம்: இறுதிகட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
ADDED : ஆக 11, 2024 04:33 AM

கோவை: கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், எத்தனால் உற்பத்திக்கு பிரத்யேகமாக, இரண்டு புதிய பயிர் ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தியை மையமாக கொண்ட மத்திய அரசின் கொள்கையில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எத்தனால், கரும்பின் மொலாசஸ் மற்றும் ஜூஸ் வாயிலாக தயார் செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, மக்காச்சோளத்திலும் எத்தனால், தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குனர் மற்றும் விஞ்ஞானி கோவிந்தராஜ் கூறியதாவது:
2018ல் 0238 ரகத்தை வடமாநிலங்களில் பயிரிட பரிந்துரைத்தோம். இது ஒரு விந்தை கரும்பு. அதிக மகசூல், அதிக சர்க்கரை கட்டுமானம் உள்ள ரகம். இதன் காரணமாக, சர்க்கரை உற்பத்தி மிக அதிகமாகிவிட்டது.
இந்திய நாட்டுக்கு தேவையான சர்க்கரை, 28.5 மில்லியன் டன்; ஆனால், உற்பத்தி 35 மில்லியன் டன்னுக்கு மேல் உள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசு கொள்கை முடிவுகளை மாற்றி, சர்க்கரையை எத்தனாலாக உற்பத்தி செய்யலாம் என்ற கொள்கையை கொண்டு வந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், நாம் கண்டுபிடித்த கரும்பு ரகம். தற்போதும், 35 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியில், 4 மில்லியன் டன் எத்தனால், உற்பத்திக்கு மாற்றப்படுகிறது. இதன் வாயிலாக, பெட்ரோலில் 15 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை, கடந்த ஜூன் மாதமே எட்டிவிட்டோம்.
இதில், 2025ல் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற, 50 சதவீத உற்பத்தி, கரும்பில் இருந்து மட்டுமே வர வேண்டும். இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எட்டு மாதங்களில் முதிர்வடையும் ரகங்களை உற்பத்தி செய்து வருகிறோம். 11015, 09004 ஆகிய ரகங்கள் இதற்கு உகந்ததாகும்.
பொதுவாக கரும்பு ஒரு ஆண்டு பயிர்; எத்தனால் ரக கரும்பை இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை பயிர் செய்யும் வாய்ப்புள்ளது. முன்பே வெளியிடப்பட்ட 11015, 09004 ஆகிய இரண்டு ரகங்களை தவிர்த்து, பிரத்யேகமாக எத்தனால் உற்பத்தியை மட்டும் மையமாக கொண்டு, அதிக மகசூல் தரும், இரண்டு புதிய ரகங்களை கண்டுபிடித்துள்ளோம். இறுதிகட்ட ஆராய்ச்சி செயல்பாடுகள் நடந்துவருகின்றன.
மத்திய அரசு கொள்கையின் படி, பெட்ரோலில் எத்தனால், கலப்பு சதவீதம் 15 சதவீதமாக தற்போது உள்ளது; தொடர்ந்து, 30 வரை படிப்படியாக அதிகரித்து கொண்டு செல்லப்படும்.
இதற்கு ஏற்ப, புதிய பயிர் ரகங்கள், அதிக மகசூல், அதிக சர்க்கரை கட்டுமானம், குறுகிய காலத்தில்அறுவடை செய்யும் வகையில், ரகங்கள் உற்பத்தி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

