அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் ஆலோசனை; பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டம் நடத்த திட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் ஆலோசனை; பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டம் நடத்த திட்டம்
ADDED : மே 13, 2024 04:18 AM

அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி ஜாமினில் வந்தார். தற்போது, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கும் அவரை, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
அவர்களிடம், 'நடக்கும் லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும்; இல்லையேல், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வரிசையாக சிறையில் தள்ளப்படுவர்' என, கெஜ்ரிவால் கூறி வருகிறார்.
ராகுல் ஏன் மவுனம்
கெஜ்ரிவால் ஜாமினில் வந்ததும், அவருக்கு வாழ்த்து கூறி பேசிய இண்டியா கூட்டணி தலைவர்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் ஒருவர். இருவரும் போனில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். கெஜ்ரிவாலிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கெஜ்ரிவால் அவர்களே... உங்களின் உறுதியான சட்ட போராட்டத்தைக் கண்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் அதிர்ந்துள்ளனர். லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. துவக்கத்தில், பா.ஜ., பக்கம் ஆதரவு இருப்பது போன்ற சூழல் காணப்பட்டது.
அடுத்தடுத்த கட்டங்களில் நிலைமை மாறியுள்ளது. பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்றே, பலரும் கூறுகின்றனர்.
துவக்கத்தில், 'இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்' என்று கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தற்போது காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே தான் போட்டி' என்று கூறி வருகிறார்.
அம்பானி -- அதானிக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் மோடி, அவர்கள் குறித்து ராகுல் ஏன் மவுனம் காக்கிறார் என்று பேசி, தன் பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜ., தலைவர்கள் இப்படி மாறி மாறி பேசுவது, அவர்கள் தோல்வி பயத்தில் இருப்பதையே காட்டுகிறது.
யோசனை
கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இன்றைக்கல்ல; என்றைக்கும் பா.ஜ.,வுக்கு வேலையில்லை. எதிர் அணியினர் பலவீனமாக இருப்பதை பயன்படுத்தி, கட்சியை ஓரளவுக்கு வளர்க்க முயற்சித்திருக்கலாம்.
ஆனாலும், இங்கெல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது. அமலாக்கத்துறை வாயிலாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.ஆர்.எஸ்., கவிதா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் நீங்கள் என, பல தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்ததால், பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை, மக்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் அனைவரையும், டில்லிக்கு வரவழைத்து, தேர்தலுக்காக பிரமாண்ட கூட்டம் நடத்த வேண்டும் என்ற, என் யோசனை ஏற்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் நீங்கள் களம் இறங்கிய போது தான், அமலாக்கத்துறை உங்களை கைது செய்தது.
அதனால், கூட்ட ஏற்பாடு கைவிடப்பட்டது.
தற்போது, இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக எழுச்சியான சூழல் இருப்பதால், கடைசி கட்ட லோக்சபா தேர்தலுக்கு முன், டில்லியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். அதற்கு, நீங்களே முயற்சி எடுக்க வேண்டும்.
ராகுல், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், சரத்பவார், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களோடு, நானும், நீங்களும் பங்கேற்க வேண்டும்.
கூட்டணிக்கு பலம்
முடிந்தால், வேறு சில மாநிலங்களுக்கும், நீங்கள் பிரசாரத்துக்கு செல்லுங்கள்; அது, நம் கூட்டணிக்கு பலமாக இருக்கும்.
இவ்வாறு கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் கூறி உள்ளார்.
அதை ஏற்ற கெஜ்ரிவால் பதிலுக்கு தெரிவித்ததாவது:
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும், அமலாக்கத்துறை வாயிலாக நெருக்கடிகள் வரும் என்பதால் தான், இண்டியா கூட்டணியை பலமானதாக்க வேண்டும் என்றேன்.
ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருக்கும் ஒரு சில தலைவர்கள், என்னையே எதிரியாக பார்த்தனர். அதன் விளைவையே, எல்லாரும் அனுபவிக்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர்களில் சிலரே, டில்லி, பஞ்சாபை கடந்து, ஆம் ஆத்மி வளர்ந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர்.
ஒத்துழைப்பு
அந்த நினைப்பை விட்டு விட்டு, ஒவ்வொருவரையும் காப்பாற்றிக் கொள்ளவாவது ஒன்றுபட வேண்டும். இதை நீங்கள் எல்லாரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.
வெற்றி - தோல்வி பற்றி கவலைப்பட வேண்டாம். பா.ஜ.,வை எதிர்க்கும் இண்டியா கூட்டணி, தேர்தலுக்கு பின்னும் ஒற்றுமையோடு தொடர வேண்டும். அதற்காக, என் கவுரவம் கெடாத வரை, என்னாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்குவேன்.
உங்கள் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் பலருக்கும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதனால், டில்லி பொதுக்கூட்டத்துக்கு நீங்களே முயற்சி எடுங்கள்; அனைத்து ஒத்துழைப்பையும் தருகிறேன்.
இவ்வாறு ஸ்டாலினிடம் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான அடுத்த கட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி உள்ளார்.