பெங்களூரு விமான நிலையத்தில் என்.ஐ.ஏ.,விடம் சிக்கிய பயங்கரவாதி
பெங்களூரு விமான நிலையத்தில் என்.ஐ.ஏ.,விடம் சிக்கிய பயங்கரவாதி
ADDED : செப் 01, 2024 05:25 AM

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நாட்டுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து, தங்கள் இயக்கத்தில் சேர்த்தனர்.
அவர்களுக்கு பயங்கரவாத கருத்துக்களை மத போதனை என்ற பெயரில் போதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
முயற்சி
தீவிர விசாரணையில், அவர்கள் தமிழகம் முழுதும் கிளை துவங்கி, தங்களுடைய பயங்கரவாத கருத்துக்களை பரப்பி வந்ததோடு, இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றியதையும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 30ல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பின் சூத்திரதாரியாக செயல்பட்ட ஒரு இளைஞரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு மத உணர்வை ஊட்டி, அவர்கள் வாயிலாக இந்தியாவில் இஸ்லாமிய கலீபாவை நிறுவுவதற்கான முயற்சிகளை, அவர் மேற்கொண்டதை கண்டறிந்துஉள்ளனர்.
ஆசிஸ் அகமது என்கிற ஜலீல் ஆசிஸ் அகமது என்ற அந்த இளைஞர், வெளிநாடு தப்பிச் செல்வதற்காக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்தபோது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது
ஹிஸ்ப்- உத் -தஹ்ரீர்- நிறுவனர் தஹி அல் -தீன் அல்- நபானி. அவர் எழுதிய அரசியலமைப்பை, உலகம் முழுதும் அமல்படுத்த போராடும் ஒரு சர்வதேச அமைப்பு தான் ஹிஸ்ப் உத் தஹ்ரீர்.
அதன் வாயிலாக, ஹிபான் -இஸ்லாமிய மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பி, உலகம் முழுதும் இஸ்லாத்தை வலுக்கட்டாயமாக பரப்பும் நோக்கத்தோடு செயல்பட்ட அந்த அமைப்பின் ஆறு பேரை, சமீபத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், தமிழகம் முழுதும் ரகசிய பயான் வகுப்புகள் நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இப்படி ரகசிய பயான் வகுப்பு நடத்தியவர்களில் ஒருவர் தான் ஆசிஸ் அகமது.
தீவிர விசாரணை
தங்கள் இயக்கத்தின் நோக்கத்தின் அடிப்படையில், தங்களுடைய தீய இலக்கை அடைய, இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடம் ராணுவ உதவி கோருவது, இவரின் முக்கிய பணியாக இருந்து உள்ளது.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஆசிஸ் அகமதுவிடம் இருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
- நமது நிருபர் -