பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க திட்டமிட்ட பயங்கரவாதிகள்
பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க திட்டமிட்ட பயங்கரவாதிகள்
ADDED : செப் 10, 2024 02:45 AM

பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட 2023 ஜனவரி 22ம் தேதி, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில், கடந்த மார்ச் 1ம் தேதி, குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு, முசாவீர் ஹுசேன் ஷாஜிப், அப்துல் மதீன் அகமது தாஹா, மாஜ் முனீர் அகமது, முஜாமில் ஹரீப் ஆகிய நால்வரை கைது செய்தது.
கடந்த ஐந்து மாதங்களாக விசாரணை நடந்த நிலையில், பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
முசாவீர் ஹுசேன் ஷாஜிப் தான், குண்டை வெடிக்க செய்துள்ளார். இவருக்கு, அப்துல் மதீன் அகமது தாஹா உதவியுள்ளார். இருவரும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த 42 நாட்களுக்கு பின், மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஷிவமொகாவின் மாஜ் முனீர் அகமது, முஜாமில் ஹரீப், ஆகியோர் உதவியது கண்டறியப்பட்டது.
இவர்கள் வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட 2023 ஜனவரி 22ம் தேதியன்று, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க திட்டமிட்டிருந்தனர்.
அங்கு பலத்த பாதுகாப்பு இருந்ததால், அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வெடிப்பு நடத்தினர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

