செல்வப்பெருந்தகையின் பின்னணி பா.ஜ.,வுக்கு உளவு சொல்லும் காங்.,
செல்வப்பெருந்தகையின் பின்னணி பா.ஜ.,வுக்கு உளவு சொல்லும் காங்.,
ADDED : ஜூலை 13, 2024 04:06 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து, தமிழக பா.ஜ., தலைமைக்கு, காங்., வட்டாரத்தில் இருந்தே ரகசிய தகவல்கள் சொல்லப்படுவதாக வெளியான தகவல், அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில், 'செல்வப்பெருந்தகை தன் மனைவி பெயரில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள் குறித்து, எனக்கு நிறைய தகவல்கள் வந்துள்ளன. அவற்றை வெளிப்படுத்துவதோடு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என்று, பேசினார்.
மேலும், சென்னை தி.நகரில் ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை தொடர்புடையவர் எனவும், காவல் துறையின் சரித்திரப் பதிவேடு பட்டியலில் இருந்தவர் என்றும், அண்ணாமலை விமர்சித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய செல்வப்பெருந்தகை, 'அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாரா? அவர் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்; கிரிமினல் அவதுாறு வழக்கும் தொடுக்கப்படும்' என்றார்.
இதையடுத்து, செல்வப்பெருந்தகை தரப்பினர், சென்னை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவரை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், 'அண்ணாமலை பேசியதை வைத்து, அவர் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை' என்று, அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால், அதிருப்தி அடைந்திருக்கும் செல்வப்பெருந்தகை, விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டது, கட்சியில் இருக்கும் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால், அவரது குற்றப்பின்னணியை ஆதாரங்களுடன் சேகரித்து, அண்ணாமலை தரப்பிடம் அளித்துள்ளனர்.
இதில், செல்வப்பெருந்தகையின் சொத்துக்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன. இதை வைத்து, செல்வப்பெருந்தகைக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதில் சொல்ல முடியாத கோபத்தில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பார்க்கின்றனர்' என்றார்.
- நமது நிருபர் -