அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக ஆசிரியர் நோட்டீஸ் வழங்கி அழைப்பு
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்குவதாக ஆசிரியர் நோட்டீஸ் வழங்கி அழைப்பு
UPDATED : ஜூலை 02, 2024 03:46 AM
ADDED : ஜூலை 02, 2024 03:43 AM

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 300 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவதாக ஆசிரியர் அறிவிப்பு செய்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார்.
அரசு பள்ளிகளில் இலவச கல்வியுடன், மாணவர்களுக்கு சீரூடை, புத்தகம், கல்வி உதவித்தொகை, சைக்கிள், காலணி, உணவு, லேப்டாப் என, பல பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம் கிராமங்களில் உள்ள கள்ளர் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களே இல்லை. ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
![]() |
சமீபத்தில் அணைப்பட்டி பள்ளிக்கு மாறுதலாகி வந்த ஆசிரியர் சுந்தர், மாணவர்களே இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதை யடுத்து, சேர்க்கைக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில், 300 ரூபாய் செலுத்தப்படும். பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ ஏற்பாடு செய்து தரப்படும்.
எளிதாக குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச உத்தரவாதம் தரப்படும் என, துண்டு பிரசுரம் அச்சிட்டு செய்து வீடு, வீடாக கொடுத்ததுடன், ஆட்டோவில் பிரசாரமும் செய்கிறார்.
சுந்தர் கூறுகையில், “பள்ளிக்கு வரும் குழந்தை களுக்கு என் சொந்த பணம், 300 ரூபாய் வங்கியில் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளேன். இருப்பினும் மாணவர் சேர்க்கை இல்லை,” என்றார்.
- நமது நிருபர் -