விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புறக்கணிக்கிறதா அ.தி.மு.க.,?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புறக்கணிக்கிறதா அ.தி.மு.க.,?
ADDED : மே 24, 2024 11:32 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக, அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதி, அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான ஆலோசனைகள், தி.மு.க., - பா.ம.க., மற்றும் பா.ஜ.,வில் துவங்கி உள்ளன.
மும்முனை போட்டி
வன்னியர் அதிகம் உள்ள இந்த தொகுதியில் போட்டியிட, பா.ம.க., விருப்பம் தெரிவித்துள்ளது. பா.ஜ., ஆதரவுடன் அக்கட்சி களமிறங்குமானால், தி.மு.க.,வுக்கும் அக்கட்சிக்கும் இடையிலான போட்டி கடுமையானதாக மாறும்.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வும் போட்டியிட முன்வந்தால், மும்முனைப் போட்டியில் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதால், இடைத்தேர்தலை புறக்கணிக்கலாமா என்ற சிந்தனை, அக்கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், ஆளுங்கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது அரிதிலும் அரிதாகி விட்டது. அதற்கே பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலோ அல்லது மூன்றாம் இடத்திற்கு வந்தாலோ, அடுத்து வரும் தேர்தல்களில், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
மூன்றாம் இடம்
கடந்த 2009ல் தி.மு.க., ஆட்சியில் ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, பர்கூர், தொண்டாமுத்துார், கம்பம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போதைய பொதுச்செயலர் ஜெயலலிதா, இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்தார்.
தேர்தலை புறக்கணித்த போதிலும், 2011ல் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வென்று, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. எனவே, விக்கிரவாண்டி தொகுதியில், வன்னியர் சமுதாய ஓட்டுகள் பிரியும் பட்சத்தில், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு உருவாகும்.
எனவே, தேர்தலை புறக்கணிக்கலாம் என, பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவர், 'வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை அ.தி.மு.க., அரசு வழங்கியதை கூறி வெற்றி பெறலாம்' என, கூறியுள்ளார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, செயற்குழுவை கூட்டி விவாதிக்கலாம் என, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

