UPDATED : மே 04, 2024 06:33 AM
ADDED : மே 03, 2024 10:04 PM

விக்கிரவாண்டி தொகுதியில், காடுவெட்டி குருவின் மகள் விருகாம்பிகையை வேட்பாளராக நிறுத்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இறுதி கட்ட லோக்சபா தேர்தலுடன், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தி.மு.க., சார்பில், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயசந்திரன், விவசாய தொழிலாளர்கள் அணி மாநில செயலர் அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி ஒன்றிய செயலர் ரவி, மறைந்த எம்.எல்.ஏ., புகழேந்தி மகனும், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான செல்வகுமாரும், அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணியும் போட்டியிட விரும்புகின்றனர்.
அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலர் பன்னீர் ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., போட்டியிடும் என்று தெரிகிறது. அக்கட்சி சார்பில் வன்னியர் சங்க தலைவர் அன்புமணி, மாவட்ட செயலர் புகழேந்தி ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
பா.ஜ., போட்டியிட விரும்பினால், தமிழக பா.ஜ., துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஏ.ஜி.சம்பத் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருகாம்பிகை மனோஜ் என்பவரை போட்டியிட வைக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் சமீபத்தில் சீமான் ஆலோசனை நடத்திஉள்ளார்.