அலுவலக உதவியாளர் காலிப்பணி இடங்களை நிரப்புவது எப்போது
அலுவலக உதவியாளர் காலிப்பணி இடங்களை நிரப்புவது எப்போது
UPDATED : ஜூலை 25, 2024 05:19 AM
ADDED : ஜூலை 24, 2024 08:10 PM

மதுரை:நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பாமல் உயர்பதவியில் ஓய்வு பெறுவோருக்கு அலுவலக உதவியாளர் சலுகை வழங்குவதால் அலுவலக உதவியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளின் இயக்கத்தில் அலுவலக உதவியாளர்கள் முக்கியமானவர்கள். ஆரம்பத்தில் 5 அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் என்ற விகிதத்தில் இருந்தனர். பின்னர் 2003 ல் 15 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப்பட்டனர். அலுவலக உதவியாளர்கள் போராடியதையடுத்து 2006 ல் 12 பேருக்கு ஒரு உதவியாளர் என்று அரசு உத்தரவிட்டது. இருப்பினும் 2003 க்கு பின்னர் நியமனம் முறையானதாக இல்லை என்று அலுவலக உதவியாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அனைத்துத்துறை நான்காம் பிரிவு ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராமச்சந்திரன் கூறுகையில் ''12:1 என்ற விகிதத்தில் நியமித்தாலும் 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாநில தலைவர் மதுரம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும்'' என்றார்.
அரசு துறைகளில் பணியில் உள்ள துணை கலெக்டர்கள் அந்தஸ்துக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் வசதி உண்டு. அவர்கள் தேவையில்லை என்றால் அதற்கு பதிலாக அவர்களுக்கான ரூ.10 ஆயிரம் தொகை பெறலாம். இவ்வகையில் பலர் அத் தொகையை பெற்று வருகின்றனர். இவ்வகையில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
இதேபோல உயர்பதவியில் ஓய்வு பெறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் அரசு செலவில் உதவியாளர் வசதி உண்டு. உதவியாளர் தேவையில்லை எனில் அப்பணியிடத்தை சரண்டர் செய்து, அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் தொகையை பெறலாம். இந்த சலுகை தற்போது டி.ஜி.பி., நிலையில் ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அலுவலக உதவியாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
மாநில பொருளாளர் ராமச்சந்திரன் கூறுகையில் ''அரசு ஊழியர்களுக்கு சரண்டர், ஊக்க ஊதியம், ஓய்வூதிய சலுகை கேட்டால் இல்லை என்கின்றனர். ஆனால் 2020 முதல் தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்திலும், சமீபத்தில் டி.ஜி.பி., அந்தஸ்தில் ஓய்வு பெற்ற 70 போலீஸ் அதிகாரிகளுக்கும் உதவியாளரை நியமித்துக் கொள்வது அல்லது அதற்கான சம்பளம் ரூ.10 ஆயிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது வேதனைக்குரியது. இதுபோன்ற உத்தரவை ரத்து செய்து காலியிடங்களை நிரப்ப வேண்டும்'' என்றார்.