ADDED : செப் 06, 2024 05:38 AM

'8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது பாடம் படிக்க தெரியலை'
சென்னை : ''புதிய தேசிய கல்விக் கொள்கையின், 'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தால், மாணவர்களின் தரம் மேம்படும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
தமிழக கவர்னர் ரவி, 300 ஆசிரியர்களுடன் கலந்துரையாடும், 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து, கவர்னர் ரவி பேசியதாவது: சுதந்திரத்துக்கு முன், நம் பொருளாதாரமும், கல்வியும் சிறப்பாக இருந்தது. மாணவர்கள் குருகுல வழியில், ஆசிரியர்களிடம் இருந்து வாழ்வியலோடு சேர்ந்த கல்வியை கற்றனர்.
![]() |
நம் கல்வித் தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவையை உணர்ந்து, நாடு முழுதும் உள்ள வல்லுனர்கள் கூடி, புதிய கல்வி கொள்கையை உருவாக்கினர். இதில், கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதை ஏற்று தமிழகம் முதலில் கையெழுத்திட்டது. தற்போது, அதில் உள்ள பலவற்றை ஏற்கமாட்டோம் என்கிறது.
பொதுவாக, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக, மேல்நிலைப் பள்ளிகளில், தரம் வாய்ந்த ஆய்வகங்களை கட்டமைக்க, மத்திய அரசு நிதி வழங்குகிறது. இதை பெற்ற மாநிலங்கள், மாணவர்களின் தரத்தை மேம்படுத்தி உள்ளன. தமிழக கிராமங்களிலும் கல்வியை வளர்க்க, முன்னாள் முதல்வர் காமராஜர் அரசு பள்ளிகளை அதிகப்படுத்தினார்.
தற்போது, கல்வியின் இன்ஜின் எனக்கூறும் தமிழக அரசு பள்ளிகளில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 75 சதவீதம் பேருக்கு, மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க, இரண்டிலக்க எண்களை அறிய முடியவில்லை. இதை மேம்படுத்தாவிட்டால், கல்வித் தரத்தை நாம் இழந்து விடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
'வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் வம்படியாக பேசுகின்றனர்'
சென்னை : ''தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதை பிடிக்காத, வயிற்றெரிச்சல் பிடித்த சிலர், தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுகின்றனர்,'' என, கவர்னர் ரவியை மறைமுகமாக தாக்கி, அமைச்சர் உதயநிதி பேசினார்.
![]() |
சென்னையில் நேற்று நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது: 'தமிழகத்தின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை' என, சிலர் அவதுாறு கிளப்புகின்றனர். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர், அரசு பள்ளியில் படித்து, இஸ்ரோ விஞ்ஞானிகளாகி உள்ளனர். அரசு பள்ளியில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர்.
இதை பிடிக்காத, வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தான் தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுகின்றனர். வம்படியாக பேச வேண்டும் என்பதற்காவே இப்படியெல்லாம் பேசுகின்றனர். தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுவது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம். இதற்கு முதல்வர் எந்த காலத்திலும் இடம் கொடுக்க மாட்டார்.
புதிய கல்விக் கொள்கையை துாக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, தரம் மிகுந்த மாநில கல்வித் திட்டத்தின் பாடத்தை குறை கூறுகின்றனர். இதற்கு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில் சொல்லி விட்டார்.
நுாலகம் தோறும் சென்று பாருங்கள்; அங்கிருக்கும் மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தைத்தான் போட்டித் தேர்வுக்காக படிக்கின்றனர். தேவையானால், மாநில கல்வித் திட்ட பாடத்தை குறை கூறுகிறவர்கள், இந்த உண்மையை நேரடியாக சென்றும் அறியலாம். இவ்வாறு உதயநிதி பேசினார்.