பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 12 பேர்; சென்னையில் ரகசிய ஆலோசனை
பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 12 பேர்; சென்னையில் ரகசிய ஆலோசனை
UPDATED : செப் 21, 2024 02:24 AM
ADDED : செப் 20, 2024 08:37 PM

பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்து, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் குழு வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்த குழுவில் மேலும் 12 பேர் இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில், 22 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்று, அ.தி.மு.க., தோல்வி அடைந்த நேரத்தில், பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர், தனி குழுவாக சென்று, சேலத்தில் பழனிசாமியை சந்தித்து பேசினர்.
அவர்களின் முடிவை நிராகரித்த பழனிசாமி, 'கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது. ஜானகியை போல சசிகலாவும் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டியவர்; அதை செய்ய சொல்லுங்கள். இருவர் தொடர்பான விஷயத்தில் இது தான் என்னுடைய தீர்க்கமான முடிவு. அவர்கள் இருவரை எந்த ரூபத்தில் கட்சியில் சேர்த்தாலும், அது கட்சிக்குத்தான் கெடுதல். அப்படியொரு ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளமாட்டேன்' என நிர்தாட்சன்யமாக கூறிவிட்டார்.
இந்த சந்திப்புக்கு பின், அந்த ஆறு முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி அதிக நெருக்கம் காட்டுவதில்லை என்றும், கட்சி தொடர்பாக எந்த ஆலோசனையும் கேட்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இக்குழுவில் கூடுதலாக 12 பேர் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த 12 பேரும் மாவட்டச்செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள். கடந்த வாரத்தில் இவர்கள், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நீலாங்கரை வீட்டில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.
பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தும், பழனிசாமியை வழிக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பிரிந்தவர்களையும் கட்சிக்கு மீண்டும் கொண்டு வந்து, அனைவரையும் ஒன்றுசேர்க்க விரும்பும் குழுவின் பலம் தற்போது 18 ஆக அதிகரித்துள்ளது.
அதனால், அவர்களின் கருத்தை கேட்க வேண்டிய நெருக்கடி, பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே, இணைப்பு விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருக்கும் அவரை, எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என, 18 பேர் குழு முடிவெடுத்து பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளதைப் போல, சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பினரிடமும், முயற்சிகள் வெற்றி அடையும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்' என்றார்.
- நமது நிருபர் -