'ஸ்டாலின் தொகுதி வாக்காளர்களில் 20,000 பேர் சந்தேகத்துக்குரியவர்கள்' :ஓட்டு திருட்டு விவகாரத்தில் பா.ஜ., பதிலடி
'ஸ்டாலின் தொகுதி வாக்காளர்களில் 20,000 பேர் சந்தேகத்துக்குரியவர்கள்' :ஓட்டு திருட்டு விவகாரத்தில் பா.ஜ., பதிலடி
ADDED : ஆக 14, 2025 12:41 AM

ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் சுமத்தி வரும் நிலையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்., - எம்.பி., ராகுல், பிரியங்கா, அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி, டிம்பிள் யாதவ் ஆகியோரது தொகுதிகளில், ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளனர்.
'இதனால், இவர்களது வெற்றியிலும் சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில் சந்தேகத்துக்குரிய, 20,000 வாக்காளர்கள் ஊடுருவியுள்ளனர்' என, பா.ஜ., தலைமை குற்றஞ்சாட்டி உள்ளது.
கேரளாவில்
இதுகுறித்து, பா.ஜ., மூத்த எம்.பி., அனுராக் தாக்கூர் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, பிரியங்காவின் லோக்சபா தொகுதியான கேரளாவின் வயநாட்டில், 93,499 பேர் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள். இவர்களில் 20,438 பேர் போலி வாக்காளர்கள். 17,450 பேர் போலி முகவரி உள்ளவர்கள்.
ராகுல் வெற்றி பெற்ற உ.பி.,யின் ரேபரேலி லோக்சபா தொகுதியில், 19,512 பேர் போலி வாக்காளர்கள். 71,977 பேர் போலி முகவரிக்காரர்கள். 52,000 பேர் போலியாக பிறப்பு சான்றிதழ் அளித்து வாக்காளர்கள் ஆக்கப்பட்டுள்னர்.
பொய் பிரசார மன்னன்
சென்னையின் கொளத்துார் தொகுதியில் சந்தேகத்துக்கிடமான, 20,000 வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், போலியான உறவுமுறை, வயதை மாற்றிக் காட்டுவது, கள்ளத்தனமாக ஏராளமானோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது என, பல முறைகேடுகள் அரங்கேறி உள்ளன.
ராகுல் ஒரு பொய்ப் பிரசார மன்னன். ராகுல் மட்டுமல்லாது பிரியங்கா, திரிணமுல் காங்.,கின் அபிஷேக் பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், தி.மு.க., ஸ்டாலின் ஆகியோர், தொகுதிக்கே சம்பந்தமில்லாத வகையில், போலி வாக்காளர்கள் பலரையும், தங்களது தொகுதிகளில் ஊடுருவ வைத்துள்ளனர்.
இந்த வாக்காளர்களை வைத்து, ஒவ்வொரு முறையும் அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெறுகின்றனர்.
ஓட்டுத் திருட்டு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் இவர்கள், வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும் வகையில், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா?
தங்கள் தொகுதியில் உள்ள ஊடுருவல் வாக்காளர்களை காப்பாற்றுவதற்காகவே சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இவர்கள் எதிர்க்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது டில்லி நிருபர்-