அரசு மருத்துவமனைகளுக்கு வரும் 100ல் 40 பேருக்கு பக்கவாத அறிகுறி
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் 100ல் 40 பேருக்கு பக்கவாத அறிகுறி
ADDED : நவ 20, 2024 11:36 PM

சென்னை: ''பிரதான அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 100 பேரில், 40 பேர் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர்,'' என, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை நரம்பியல் துறை தலைமை டாக்டர் பூபதி கூறினார்.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், உலக பக்கவாத தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவமனை இயக்குனர்மணி, பேரணியை துவக்கி வைத்தார்.
திடீர் குழப்பம்
இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைமை டாக்டர் பூபதி கூறியதாவது:
தமிழகத்தில் புற்றுநோய், இதய நல பாதிப்புகளுக்கு அடுத்தபடியாக, பக்கவாதம் போன்ற நரம்பியல் சார்ந்த பாதிப்பு உள்ளது.
இதில், 'இஸ்கிமிக்' மற்றும் 'ஹெர்மோர்ராஜிக்' ஆகிய இரண்டு வகை பாதிப்புகள் உள்ளன.
மூளையில் உள்ள ரத்த குழாயில் ரத்த ஓட்டம் இல்லாமல் உறைவதால், 'இஸ்கிமிக்' பக்கவாதம் ஏற்படுகிறது. 'ஹெமோர்ராஜிக்' பக்கவாதம், மூளையில் உள்ள ரத்த நாளங்களில் கசிவு காரணமாக உண்டாகிறது.
முகம், கை, காலில் என, உடலின் ஒரு பக்கத்தில் திடீரென உணர்வின்மை அல்லது பலவீனம், திடீர் குழப்பம், பேசுவதில் சிரமம், பேச்சை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் வாயிலாக, பக்கவாத பாதிப்பை கண்டறிய முடியும்.
மேலும், திடீரென பார்ப்பதில் சிக்கல், தலைசுற்றல், சமநிலை இழப்பு நிலை ஏற்படுகிறது.
பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட முதல் 6 மணி நேரம் என்பது முக்கியமானது. அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால், ரத்த உறைவை கரைக்கும், 'க்ளாக் பஸ்டர்' மாத்திரை தரப்பட்டு, 'த்ரோம்போலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த சிகிச்சை முறையை உடனடியாக எடுக்காவிட்டால், மூளை திசுக்கள் அழிந்து, நிரந்தர பக்கவாதமாக மாறி விடும்.
அதன்பின், பக்கவாதத்தின் பிந்தைய பாதிப்புகளை தடுப்பதற்கான சிகிச்சை முறைகளை மட்டுமே அளிக்க முடியும்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துமவனைகள், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை போன்ற பிரதான மருத்துவமனைகளுக்கு வரும், 100 நோயாளிகளில், 40 பேர், பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சைக்கு பெறுகின்றனர்.
அவர்களில், 5 சதவீதத்துக்கு குறைவானவர்களே, ஆரம்பத்திலே பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சைக்கு வருகின்றனர். மற்றவர்கள் பக்கவாத பாதிப்புடன் தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.
நரம்பியல் பாதிப்பு
பக்கவாத பாதிப்புக்கு பிரதான காரணங்கள், துாக்கமின்மை, உரிய நேரத்தில் சாப்பிடாதது,கண்ட நேரங்களில் துரித உணவு சாப்பிடுதல், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுதல் போன்றவை.
இதனால் தான் நரம்பியல் சார்ந்த பாதிப்புகள், இளம் வயதினரிடையே அதிகரித்து வருகின்றன.
வீட்டு உணவு, இரவில் துாக்கம், சரியான நேரத்தில் சாப்பாடு உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைபிடித்தால், பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.