சென்னையில் புதிதாக 41 குளங்கள் வெள்ள பாதிப்பை தடுக்க முயற்சி
சென்னையில் புதிதாக 41 குளங்கள் வெள்ள பாதிப்பை தடுக்க முயற்சி
UPDATED : டிச 05, 2024 06:24 AM
ADDED : டிச 05, 2024 12:16 AM

சென்னை, சென்னையில், 225 குளங்கள் உள்ள நிலையில், மேலும் புதிதாக, 41 குளங்களை உருவாக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. நீர் நிலைகள் சீரமைப்பில் கவனம் செலுத்தியதால், சமீபத்தில் 15 செ.மீ., மழை பெய்தும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு மற்றும் குளங்கள் கட்டமைப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேற்று, பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அதன்படி, விருகம்பாக்கம் நடேசன் நகரில் நடந்து வரும் கால்வாய் பணிகள், விருகம்பாக்கம், வேம்புலியம்மன் தெருவில், வக்பு போர்டு குளம் சீரமைப்பு, வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகர் குளம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, நான்கு புதிய குளங்கள் மற்றும் வேளச்சேரியில் கட்டமைக்கப்பட்டுள்ள இரு குளங்களையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாநகராட்சி துணை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
சென்னை மாநகராட்சி முழுதும் 225 குளங்கள் உள்ளன. புதிதாக 41 குளங்கள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை ரேஸ் கிளப் வளாகத்தில், நான்கு குளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய குளங்கள் உருவாக்கும் யோசனை, வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகர் மக்களிடம் இருந்து தான் கிடைத்தது. அங்கு, 7.5 ஏக்கர் பரப்பளவில் குளம் புனரமைக்கப்பட உள்ளது. 4.48 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் வாயிலாக, 42 தெருக்களில் வெள்ளபாதிப்பு ஏற்படாது.
வேளச்சேரியில், 675 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு, புதிதாக இரு குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 6 செ.மீ., மழைக்கே, மழைநீர் தேங்கும் இந்த பகுதியில், 15 செ.மீ., மழை பெய்தும் பாதிப்பில்லை.
மழைநீர் தேங்குவதை தடுப்பது ஒருபக்கம் இருப்பினும், மறுபுறம் அந்த தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீரை உயர்த்த கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.