வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 5 பேர் பழனிசாமி அணிக்கு ஓட்டம்
வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 5 பேர் பழனிசாமி அணிக்கு ஓட்டம்
ADDED : மே 26, 2026 05:12 AM

சென்னை: அதிருப்தி அணியில் இருந்து ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பக்கம் தாவி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை இல்லாத த.வெ.க., ஆட்சி அமைக்க, ஆதரவு அளிப்பது தொடர்பாக அ.தி.மு.க.,வுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சட்டசபையில் த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஓட்டெடுப்பு நடத்திய போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்தனர்.
அதற்கு கைமாறாக, த.வெ.க., அமைச்சரவையில் அ.தி.மு.க., அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெற போவதாக கூறப்பட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வந்த வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்த முதல்வர் விஜய், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி வழங்கவில்லை.
இதனால், அதிருப்தி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வேலுமணி தரப்பில் இருந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர்.
அதேபோல, ஆற்காடு எம்.எல்.ஏ., சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி பக்கம் தாவினர்.
இதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகம் வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஐவரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, புதிய மனு ஒன்றை அளித்தனர். அதில், வேலுமணி தரப்பு அணியில் நாங்கள் இல்லை. எனவே, முன்னர் நாங்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தை வாபஸ் பெறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
