500 நாள் கடந்தும் அசராத போராட்டம்! மத்திய தொல்லியல் துறை மீது தளராத நம்பிக்கை
500 நாள் கடந்தும் அசராத போராட்டம்! மத்திய தொல்லியல் துறை மீது தளராத நம்பிக்கை
UPDATED : செப் 29, 2024 09:02 PM
ADDED : செப் 29, 2024 02:11 AM

திருப்பூர்: குமரிக்கல்பாளையம் விவசாயிகள், கோரிக்கையை வலியுறுத்தி, 500 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்;
விவகாரத்தில் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில், குமரிக்கல்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில், துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், அப்பகுதியில் பழமையான தொல்லியல் எச்சங்கள் இருப்பதால், துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும், என வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், தொல்லியல் எச்சங்கள் அமைந்துள்ள இடத்துக்கும், துணை மின் நிலையம் அமைக்கும் இடத்துக்கும் தொடர்பில்லை என, மின்வாரியம் சார்பில், ஊத்துக்குளி ஊராட்சிக்கு விளக்க கடிதம் அனுப்பபட்டது. அதோடு, அந்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.இருப்பினும், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் காத்திருப்பு போராட்டம், 500வது நாளை கடந்துவிட்டது.விவசாயிகள் கூறுகையில்,'இதுவரை, நான்கு முறை அந்த இடத்தை மத்திய தொல்லியல் குழுவினர், ஆய்வு செய்தனர். அங்கு பிரம்மாண்ட நடுகல், முதுமக்கள் தாழி, பானைகள், எலும்பு துண்டுகள் என, மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை உறுதி செய்தனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக தொல்லியல் துறை பெரிதாக எந்த ஆர்வமும் காட்டுவதாக தெரியவில்லை. இந்த இடத்துக்கு தொல்லியல் முக்கியத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்,' என்றனர்.