ADDED : செப் 22, 2024 12:55 AM

புதுடில்லி: ''சுகாதாரமற்ற உணவுகளால் ஆண்டுதோறும் உலகம் முழுதும் 60 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் ஆண்டுதோறும் 4.20 லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன,” என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
உலக உணவுக் கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாடு புதுடில்லியில் துவங்கியது. இரண்டு நாள் நடந்த இந்த மாநாட்டின் நிறைவு நாளில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
பருவநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், புதிய தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகிய காரணங்களால் நம் உணவு முறைகளுக்கான சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகளால் ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்; 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பாதுகாப்பற்ற உணவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் பேர், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குள்ளான செய்தி.
உலகில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சத்தான உணவை வாங்கி சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம். அனைவருக்கும் பாதுகாப்பான உணவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.