மாணவர்களிடையே உருவெடுக்கும் வன்முறை கலாச்சாரம்! புத்தகம் துாக்க வேண்டிய கரங்களில் அரிவாள் எடுப்பதை தவிர்ப்பது எப்படி?
மாணவர்களிடையே உருவெடுக்கும் வன்முறை கலாச்சாரம்! புத்தகம் துாக்க வேண்டிய கரங்களில் அரிவாள் எடுப்பதை தவிர்ப்பது எப்படி?
ADDED : ஏப் 18, 2025 05:51 AM

கோவை : தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் இடையே வன்முறை செயல்கள் அதிகரித்து வருகின்றன. பேனா, பென்சில் போன்ற சிறிய பொருட்களை பகிர்ந்துகொள்ளாத முரண்பாடுகளுக்கே, அரிவாளை கையில் எடுக்கும் அளவுக்கு, எட்டாம் வகுப்பு மாணவனின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்கள் வன்கொடுமைகளை மெருகேற்றிக் காட்டுவதை சுட்டிக்காட்டலாம். வீட்டில் பெற்றோர் போதுமான நேரம் செலவிடாமல், பிள்ளைகளின் மனநிலையை கவனிக்கத் தவறுகிறார்கள். பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் அமைப்புகள் சரிவர செயல்படுவதில்லை. மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் மரியாதை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் உளவியல் வகுப்புகள் தொடர்ச்சியின்றி நடைபெறுவதால் பயனளிப்பதில்லை. ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க அதிகாரம் இல்லாதது முக்கிய தடையாக இருப்பதாக கருத்து நிலவுகிறது.
ஒழுக்கம் அவசியம்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் அரசு கூறுகையில், ''வகுப்பில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களின் மனநிலை பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் 'ஆல் பாஸ்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனால், படிப்பில் மாணவர்கள் முழு கவனம் செலுத்தாமல் உள்ளனர். 'படிக்கவில்லை என்றாலும் பாஸ் செய்து விடுவார்கள்' என்கிற எண்ணம், தவறான செயல்களுக்கு வழிவகுக்கிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறார்கள்,'' என்றார்.
கண்டிக்கும் அதிகாரம்
கோவை அனைத்து ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனந்த் குமார் கூறுகையில், ''அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வகுப்புகள் சரிவர நடப்பதில்லை. பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்கத் தேவையான அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால், ஒழுக்க சீர்கேடுகள் உருவாகின்றன. தற்போது பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிக்க தவறிவிடுகின்றனர். சமூக ஊடகங்கள், 'கூல் லிப்' பயன்பாடுகள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம். தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில், அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்குக் கண்டிக்கும் அதிகாரம் வழங்கவேண்டும்,'' என்றார்.
![]() |
உளவியல் வகுப்பு இல்லை
உளவியல் ஆலோசகர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''சமூகத்தில் வன்முறை கலாசாரம், சமூக ஊடகங்கள் வழியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது கண்டனத்துக்குரியதாகக் கருதப்படுகிறது. இதனால், அவர்கள் மாணவர்களின் ஒழுக்க நடத்தை தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில்லை. மேலும், நீதி போதனை வகுப்புகள், போதுமான உளவியல் ஆலோசனை வகுப்புகள் இல்லாமை போன்ற காரணங்களால், மாணவர்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்,'' என்றார்.