அள்ளி குவிக்கும் மதுபான வருமானம்; தி.மு.க., அரசுக்கு பா.ஜ., கூட்டணி சாபம்
அள்ளி குவிக்கும் மதுபான வருமானம்; தி.மு.க., அரசுக்கு பா.ஜ., கூட்டணி சாபம்
ADDED : ஜன 18, 2026 04:07 AM

சென்னை: 'டாஸ்மாக் வருமானத்தை பெரிதாக பார்க்கும் தி.மு.க., அரசு, இனியொரு முறை தப்பி தவறிக்கூட தமிழகத்தை ஆளக்கூடாது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என உருகி உருகி வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 518 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரசியமான நகைமுரண்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை எனும் அளவிற்கு, பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையை பல மடங்கு முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது, 'டாஸ்மாக்' மாடல் அரசு.
குறிப்பாக, பொங்கலுக்கு 3,000 ரூபாய் கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்த பணத்தை டாஸ்மாக் வாயிலாக திரும்ப வசூலித்த தி.மு.க., அரசின் அறிவாற்றலை பார்க்கையில், 'இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே' என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது.
பொங்கலுக்கு கொடுத்த ரூபாய் நோட்டு எண்ணும், டாஸ்மாக்கில் வசூலான நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என செய்திகள் வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. போதையால் சமூகத்தில் நிகழும் கொடுமைகளை தடுப்பதை விட, டாஸ்மாக் வருமானத்தையே பெரிதாக பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பி தவறிக்கூட தமிழகத்தை ஆளக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே கருத்தை மையப்படுத்தி, பா.ம.க., தலைவர் அன்புமணியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் போகி, பொங்கல் ஆகிய இரு நாட்களில், டாஸ்மாக் கடைகளில் மட்டும், 518 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையாகி உள்ளன.
மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத தி.மு.க., அரசு, ஆண்டுதோறும் மக்களை மேலும் மேலும் குடிகாரர்களாக்கி, மது வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. இது சாதனை அல்ல; வேதனை.
கடந்த ஆண்டு பொங்கலின்போது, 454 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. நடப்பாண்டில் அதை விட, 14.10 சதவீதம் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதம். அதை விட அதிகமாக மது வணிகம் தான் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு பொங்கலின்போது, நான்கு நாட்களில் 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நான்கு நாட்களில் மது வணிகம், 900 கோடி ரூபாயைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்ட 6,000 கோடி ரூபாயையும், மீண்டும் வசூலித்துக் கொள்வதற்காக, தி.மு.க., அரசு இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறதோ என்ற எண்ணமே எழுகிறது.
மக்கள் விரோத - மது ஆதரவு அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

