விஜயை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை: தி.மு.க., ஆதரவு காங்., கோஷ்டி தலைவர்கள் நெருக்கடி
விஜயை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை: தி.மு.க., ஆதரவு காங்., கோஷ்டி தலைவர்கள் நெருக்கடி
ADDED : டிச 08, 2025 06:01 AM

த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசிய, காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவு கோஷ்டி தலைவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங் கிரஸ் கட்சியில், கூட்டணி குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, சென்னை அறிவாலயத்தில், கடந்த 3ம் தேதி, தி.மு.க., தலைவரும் முதல் வருமான ஸ்டாலினை சந்தித்தது.
கூட்டணி பேச்சு
அப்போது, 'ஆட்சியில் பங்கு; காங்கிரசுக்கு 39 தொகுதிகள்; இது குறித்து டிச., 20ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்' என, காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட ஐவர் குழு தெரிவித்தது.
அதற்கு, 'இது குறித்து ராகுலிடம் பேசிக் கொள்கிறேன்' என ஸ்டாலின் கூறியுள்ளார். இதை, கிரிஷ் சோடங்கர், ராகுலிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜயை, சென்னையில் அவரது இல்லத்தில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து, தவெ.க., - காங்., கூட்டணி தொடர்பாக பேசினார்.
அப்போது, 125 தொகுதிகளின் பட்டியலை விஜயிடம் வழங்கி, அதிலிருந்து 75 தொகுதி களை காங்கிரசுக்கு ஒதுக்கும்படி, பிரவீன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரை விஜயிடம் அனுப்பியது ராகுல் தான் என, தமிழக காங்கிரசில் உள்ள விஜய் ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால், இந்தச் சந்திப்பு குறித்து ராகுலுக்கு தெரியாது என, தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
விஜயை சந்திக்கும் முன், பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கையில், 'மற்ற கட்சிகள், கட்சி நிகழ்ச்சிக்கும் பேரணிக்கும் ஆட்களை திரட்ட வேண்டி இருக்கிறது. த.வெ.க., நிலைமை, நேர்மாறாக இருக்கிறது. 'அதிக கூட்டம் கூடுவதால், அதை குறைப்பதே அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனக்கு தெரியாது
த.வெ .க.,வை, பிரவீன் ச க்கரவர்த்தி இப்படி பாராட்டியதை தி.மு.க., தலைமை விரும்பவில்லை. மே லும், விஜயை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது தொடர்பாக, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந் தகையிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது. 'இண்டி' கூட்டணி இரும்புக் கோட்டையாக உள்ளது. எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம்,'' என்றார்.
இது குறித்து, தமிழக காங்., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சிலர், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களின் வாரிசுகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் வாங்க விரும்புகின்றனர். சிலர், ஆளுங்கட்சியிடம், தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துள்ளதால், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க விரும்புகின்றனர்.
ஆனால், பெரும்பான்மையான நிர்வாகிகள், தொண்டர்கள், 'தி.மு.க., கூட்டணி வேண்டாம்; த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்ற மன நிலையில் உள்ளனர். பிரவீன் சக்கரவர்த்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு கருதுகிறது.
எனவே, இன்று நடக்கும் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவது குறித்தும், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணியை தொடரலாம் என தெரிவிப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வலியுறுத்தல்
அதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரசில் இருக்கும் தி.மு.க., ஆதரவு கோஷ்டி தலைவர்கள் சிலர், டில்லி மேலிடத்தில், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க, வலியுறுத்தி வருகின்றனர்.
பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்தால், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் தொடரும். இல்லாவிட்டால், த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி மலரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

