அஜித்தை சீண்டிய ஆதவ் அர்ஜுனா: பொதுக்குழு பேச்சால் சலசலப்பு
அஜித்தை சீண்டிய ஆதவ் அர்ஜுனா: பொதுக்குழு பேச்சால் சலசலப்பு
ADDED : நவ 08, 2025 12:58 AM

சென்னை: த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், நடிகர் அஜித்தை சீண்டியதால் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை.
இருந்தபோதும், த.வெ.க., ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் விஜய் இறங்கியுள்ளார்.
இதற்காக, விவசாயிகள், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, தன் சினிமா வட்டத்தில் உள்ள நண்பர்களுடன், அவர் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக, அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை கைப்பற்ற விஜய் விரும்புகிறார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, நடிகர் அஜித் தன் கருத்தை கூறியிருந்தார். 'கரூர் சம்பவத்திற்கு தனி மனிதருடைய தவறு மட்டும் காரணமல்ல; அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது; செல்வாக்கை காட்ட கூட்டம் கூட்டுவதை நிறுத்த வேண்டும்' என, அஜித் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள், இதுபோன்று விஜய்க்கு எதிராக கருத்து சொல்ல கிளம்பியுள்ளனர்' என, அஜித்தை மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய அஜித், 'என் பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயல்கின்றனர். விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன்; அவருடைய முயற்சியை வாழ்த்தி இருக்கிறேன்' என கூறியுள்ளார்.
'த.வெ.க.,வின் ஓட்டு வங்கியை அதிகரிக்கும் வகையில் விஜய் காய் நகர்த்தி வரும் வேளையில், கட்சியின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் வகையில், ஆதவ் அர்ஜுனா பேசுவது சரியல்ல' என கட்சியினர் புலம்புகின்றனர்.

